ரூ. 5 லட்சம் லஞ்சம் கேட்ட கலால்துறை அதிகாரி கைது
மதுரை:
ரூ.15 லட்சம் வரி ஏய்ப்பு செய்த பஞ்சாலை அதிபரிடம் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட கலால் துறை கண்காணிப்பாளரை சி.பி.ஐ. கைது செய்தது.
திருச்சி கலால் துறையில் (எக்சைஸ்) கண்காணிப்பாளராக பணிபுரிபவர்கள் தமிழரசன், ஜெயக்குமார். இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி கரூரில் ஒருதனியார் பஞ்சாலையில் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனையில் மில் உரிமையாளர் ரூ.15 லட்சத்திற்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதை கண்டுபிடித்தனர். அதற்கான நடவடிக்கையில் இருந்து தப்பிக்கவேண்டுமானால் 5 லட்சம் ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று மில் உரிமையாளரிடம் கேட்டுள்ளனர்.
மில் உரிமையாளர் பேரம் பேசிப் பார்த்துள்ளார். அதிகாரிகள் மசியவில்லை. 5 லட்சத்திற்கு ஒரு பைசா குறைக்க முடியாது என்று கறாராக இருந்துவிட்டனர்.
இதனால் கோபமடைந்த மில் அதிபர் ரகசியமாக சி.பி.ஐ.யிடம் புகார் செய்தார். சி.பி.ஐ. அதிகாரிகள் செய்த ஏற்பாட்டின்படி மீண்டும் மில் அதிபர், கலால்துறை அதிகாரிகளிடம் பேரம் பேசி, 4 லட்சம் ரூபாயை முதல் கட்டமாக தருவதாக ஒப்புக் கொண்டார்.
அதன்படி அந்த தொகையை குறிப்பிட்ட நாளில் வந்து வாங்கிச் செல்லும்படி சொன்னார். பெட்டியுடன் வந்தனர் கலால் துறை அதிகாரிகள். தயாராக இருந்தசி.பி.ஐ. அதிகாரிகள் அவர்களை சுற்றி வளைத்தனர்.
நிலைமையை அறிந்த ஜெயக்குமார் திடீரென்று வெளியே ஓடி தப்பித்துக் கொண்டார். தமிழரசன் வசமாக சிக்கிக் கொண்டார். தலைமறைவாக இருந்தஜெயக்குமாரையும் விடாமல் பிடித்து கைது செய்தது சி.பி.ஐ.
இருவரையும் மதுரை சி.பி.ஐ. நீதிமன்றத்தில் செவ்வாய் கிழமை ஆஜர்படுத்தினர்.