திமுக கூட்டணியில் விரிவடையும் விரிசல்
சென்னை:
தமிழகத்தில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விரிசல் மேலும் விரிவடைந்துள்ளது.
கூட்டணியில் உள்ள இரு கட்சிகள், கூட்டணியில் முக்கிய கட்சியாகத் திகழும் திமுகவையும், அதன் தலைவர் மு. கருணாநிதியையும் கடுமையாகத் தாக்கி பேசிவருகின்றனர்.
மத்திய அமைச்சரவை சமீபத்தில் விரிவுபடுத்தப்பட்டது. அதில் தான் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதில் எம்.ஜி.ஆர். அதிமுக பொதுச் செயலாளர்திருநாவுக்கரசும் அவரது கட்சியினரும் ஆழ்ந்த வருத்தத்திலும், கோபத்திலும் உள்ளனர்.
அதே நேரத்தில் கூட்டணிக் கட்சிகளிடையே உள்ள பிரச்சினையைப் பேசித் தீர்க்க தேசிய ஜனநாயக் கூட்டணிக் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று பலமுறைகூறியும் கூட்டத்தைக் கூட்டணித் தலைவர் கருணாநிதி கூட்டவில்லை என்பது பாட்டாளி மக்கள் கட்சியின் வருத்தம், கோபம்.
இப்படி கூட்டணியில் உள்ள இரு கட்சிகள் கூட்டணித் தலைமைக்கு எதிராக கருத்து தெரிவித்து வருவது கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசலை மேலும்விரிவுபடுத்தியுள்ளது.
சமீபத்திய மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தால் பயன்பெற்றது பாரதீய ஜனதா கட்சிதான். மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி கூட்டணியில் எம்.ஜி,ஆர்.அதிமுகவுக்கு மரியாதையும், மதிப்பும் இல்லை.
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் கட்சிக்கு சீட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் ராஜ்சபை உறுப்பினர்நியமனத்திலும் இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இரண்டு எதிர்பார்ப்பையும் திமுக பொய்யாக்கிவிட்டது. எந்தக் கட்சிக்கும் இடம் கொடுக்க திமுக மறுத்துவிட்டது.
மாநிலத்தில்தான் இப்படி என்றால், மத்தியிலும் எம்.ஜி.ஆர். அதிமுக புறக்கணிக்கப்படுகிறது. திருச்சி எம்.பி.யாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தரங்கராஜன் குமாரமங்கலம் காலமானார்.
அதனால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப தமிழகத்திலிருந்து கூட்டணிக் கட்சிக்கு அமைச்சர் வாய்ப்பு கொடுக்கப்படும் என்றும், அதுவும் எம்.ஜி.ஆர்.அதிமுகவின் ஒரு எம்.பி.யான எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்றும் எதிர்பார்த்தேன்.
ஆனால், அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. எனக்கும், கட்சிக்கும் அநீதி இழைக்கப்பட்டுவிட்டது என்றார் திருநாவுக்கரசு.
எம்.ஜி.ஆர். அதிமுகவைப் போல் பாட்டாளி மக்கள் கட்சியும், தமிழக தேசிய ஜனநாயகக் கட்சித் தலைமையை கடுமையாக விமர்சித்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளிடையே உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைய கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டவேண்டும் என்று கூட்டணிக்கட்சித் தலைவர் கருணாநிதியிடம் பலமுறை முறையிட்டோம்.
ஆனால், கூட்டத்தைக் கூட்ட அவர் மறுத்துவிட்டார். ஒரே ஒருமுறை அத்தகைய கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால், அதில் எனது பிறப்பு, நான் வாங்கியடாக்டர் பட்டம் பற்றித்தான் விவாதிக்கப்பட்டதே தவிர வேறு எதைப் பற்றியும் பேசவில்லை என்றார் பாமக நிறுவனர் எஸ். ராமதாஸ்.
கூட்டணியில் பிரச்சினை இருந்தாலும், தேர்தலில் தனித்து நின்றோ அல்லது மூன்றாவது அணியில் இருந்தோ போட்டியிட பாமக விரும்பவில்லை.
தமிழகத்தில் 60-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் உள்ளன. அவை எல்லாம் தேர்தலில் தனித்து நின்று போட்டியிட்டால் அப்போது பாமகவும்தனித்துப் போட்டியிடும்.
அதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒரு கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி நீடிக்கும். பாமகவை கூட்டணியில் வைத்துக் கொள்ள கூட்டணிக்கட்சிகள் விரும்பவில்லை என்றால் அதை அக் கட்சிகளே தெரிவிக்கவேண்டும்.
அப்போதுதான் கூட்டணியில் இருந்து விலகுவது பற்றி பாட்டாளி மக்கள் கட்சி முடிவு எடுக்கும் என்றார் ராமதாஸ்.
ஐ.ஏ.என்.எஸ்.