ரஷியாவுக்கு கம்ப்யூட்டர்கள் விற்க இந்தியா திட்டம்
டெல்லி:
தனது நாட்டில் உள்ள பள்ளிகளுக்காக இந்தியாவிலிருந்து கம்ப்யூட்டர்களை ரஷ்யா வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா காட்டிவரும் ஆர்வத்தையும், ஈடுபாட்டையும் கருத்தில் கொண்டு இந்தியாவிலிருந்து கம்ப்யூட்டர்களை வாங்க ரஷ்யா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் மற்றும் ரஷ்ய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் ரேமேனுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இதுபற்றி ஆலோசிக்கப்பட்டது.
ரஷ்யாவில் உள்ள பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள் தேவைப்படுகிறது. எவ்வளவு கம்ப்யூட்டர்கள் தேவைப்படும். அதை எப்போது சப்ளை செய்யவேண்டும் என்பது குறித்து இறுதி முடிவு செய்யப்பட்டு அது குறித்த தகவல் இந்தியாவுக்கு விரைவில் அனுப்பப்படும் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவிடமிருந்து கம்ப்யூட்டர்களைப் பெறும் ரஷியா, அதற்குப் பதிலாக டி.90 ரக டாங்குகளை இந்தியாவுக்கு வழங்குகிறது ரஷியா.
17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின:
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே சாதனை அளவாக 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
செவ்வாய்க்கிழமை மட்டும் 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் பயங்கரவாதத்துக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது, ராணுவ தளவாட உற்பத்தியை இணைந்து மேற்கொள்வது என்பது உள்ளிட்டவை அடங்கும்.
அதனுடன் சேர்த்து புதன்கிழமை மேலும் 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதில் 800 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு ராணுவ டாக்குகள் மற்றும் போர் விமானங்களை இந்தியாவுக்கு ரஷ்யா சப்ளை செய்வது தொடர்பான ஒப்பந்தமும் அடங்கும்.
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே பயங்கரவாத ஒழிப்பு, ராணுவ தளவாட உற்பத்தி, ஆயுத சப்ளை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், அணு சக்தி, வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான மொத்தம் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்தியாவுக்கு வெளிநாட்டுத் தலைவர் ஒருவர் மேற்கொண்ட அரசு முறைப் பயணத்தில் இவ்வளவு அதிக ஒப்பந்தங்கள் கையெழுத்தானது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல் ரஷ்ய அதிபர் என்ற பெருமையை விளாடிமிர் புடின் பெற்றுள்ளார். மேலும், அவரது பயணத்தின்போது இவ்வளவு அதிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என்பதும் ஒரு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
புடின் தனது அரசு முறைப் பயணத்தை ஆக்ராவில் தாஜ்மகாலைப் பார்க்கும் நிகழ்ச்சியுடன் முடித்துக் கொள்ள உள்ளார். தாஜ்மகாலைப் பார்த்தபிறகு அவர் மும்பை சென்று அங்கிருந்து ரஷ்யா பயணமாகிறார்.
ரஷ்யாவுக்குப் புறப்படும் முன் இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து கூட்டு அறிக்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.