வீரப்பனை சந்திக்க காட்டுக்குள் சென்றார் பழ. நெடுமாறன்?
சென்னை:
ராஜ்குமார் கடத்தல் நாடகத்தில் திடீர் திருப்பமாக சந்தனக் கடத்தல் வீரப்பனின் திடீர் அழைப்பை ஏற்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் புதிய தூதராக காட்டுக்குள் சென்றுள்ளார்.
அரசு தூதர் நக்கீரன் கோபாலின் மீது அதிருப்தி அடைந்துள்ள வீரப்பன், நெடுமாறனுக்கு திடீர் அழைப்பு விடுத்துள்ளதாகவும், இதையடுத்து அவர் சில நிருபர்களுடன் காட்டுக்குள் நுழைந்து விட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
67 நாட்களாக சந்தன வீரப்பன் காட்டில் பிணைக் கைதியாக இருக்கும் கன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க கர்நாடக - தமிழக அரசுகள் படாத பாடு பட்டு வருகின்றன.
இரு மாநில அரசுகளின் ஏகோபித்த தூதராக நக்கீரன் கோபால் 4 முறை காட்டுக்குள் சென்று வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பேச்சுவார்த்தை இழுத்துக் கொண்டே போகிறது.
இந்நிலையில் ராஜ்குமார் மீட்பு தொடர்பாக வீரப்பனுடன் பேச்சு நடத்துவதற்காக தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், தமிழ்நாடு விடுதலைப்படையுடன் நெருங்கிய தொடர்புடையவராகக் கருதப்படுபவருமான பழ.நெடுமாறன் காட்டுக்குள் சென்றிருப்பதாகத் தெரிகிறது.
அவருடன் பாண்டிச்சேரியை சேர்ந்த தமிழன் எக்ஸ்பிரஸ் நிருபர் தர்மராஜன், பி.யு.சி.எல். அமைப்பின் நிர்வாகி சையத், இணையச் செய்தித் தளம் ஒன்றின் நிருபர் சுகுமாறன், பத்திரிக்கை புகைப்படக்காரர் டெய்ஸ் கலைச்செல்வன் ஆகியோர் சென்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கோபாலையே தூதராக அனுப்புவது என்பதில் தமிழக அரசும், கர்நாடக அரசும் உறுதியாக இருக்கும் நிலையில் திடீரென நெடுமாறனை வீரப்பன் அழைத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கோபால் மீது தமிழ்நாடு விடுதலைப் படையைச் சேர்ந்தவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும், அடுத்தமுறை வரும்போது நெமாறன் போன்ற ஒருவரை உடன் அழைத்து வரும்படியும் கோபாலிடம் வீரப்பன் சொல்லி அனுப்பியதாகவும் தெரிகிறது.
அதேபோல் கர்நாடக, தமிழக அரசுக்கு அனுப்பியிருந்த கேசட்டிலும் இந்த கோரிக்கையை வீரப்பன் வற்புறுத்தியிருந்த தகவலும் இப்போது வெளியாகி உள்ளது. ஆனால், இதை இரு மாநில அரசுகளும் மறைத்து விட்டன.
இன்னும் இரு தரப்பிலும் மறைக்கப்பட்ட பல விஷயங்கள் நெடுமாறனின் காட்டுப் பயணம் மூலம் வெளிவரும் என்கின்றனர் தமிழர் தேசிய இயக்கத்தை சேர்ந்த அமைப்பாளர்கள்.
மதுரையில் இரு தினங்களுக்கு முன் மாநாடு நடத்தினார் நெடுமாறன். இந்த மாநாட்டிற்கு வந்து வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்செய்தியை சென்னையில் வெளியாகும் மாலைச்சுடர் நாளிதழ் வெளியிட்டுள்ளது.