மகன் இறந்த சோகம்: 3ம் நாளில் தாய், தந்தை மரணம்
மதுரை:
மகன் இறந்த சோகத்தில் பெற்ற தாயும், தந்தையும் ஒரே நாளில் அடுத்தடுத்து உயிரை விட்டனர். இருவரின் உடல்களும் ஒரேபாடையில் எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இப்படியொரு உருக்கமான சம்பவம் மதுரை அருகே நிலக்கோட்டையைடுத்த கிராமத்தில் நடந்தது.
இங்குள்ள விளாம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர் (48). இவரது மனைவி பத்மா (45). இவர்களுக்கு பார்த்திபன் (22),பாலருகன் (18) என்ற இரு மகன்கள். மூத்த மகன் பார்த்திபன் மீது தாயும், தந்தையும் அதிக பாசத்துடன் இருந்து வந்தனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட பார்த்திபன் மரணமடைந்தார். அந்த அதிர்ச்சியில் இருந்துமீள முடியாத இருந்த தாய் பத்மா படுக்கையானார். சிகிச்சைக்காக அவரை மதுரையில் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மகன் இறந்த சோகத்தில் மூழ்கியிருந்த தந்தை பன்னீருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவரை மதுரைமருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவரது உயிர் பிரிந்தது.
இதையடுத்து அவரது உடலுடன் காரை கிராமத்திற்கு திரும்பினர். மகன் இறந்த மூன்றாவது நாளில் தந்தை மரணம் என்ற தகவல்பரவ, மொத்த கிராமமும் அந்த வீட்டில் திரண்டிருந்தது. அந்த நேரத்தில் மதுரையில் இருந்து போன் வந்தது. மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்த தாயார் பத்மாவும் இறந்து விட்டார் என்று செய்தி தெரிவிக்கப்பட்டது.
அதே காரில் மீண்டும் மதுரை சென்று பத்மாவின் பிணத்தை எடுத்துக் கொண்டு கிராமத்திற்கு திரும்பினர் உறவினர்கள். கணவன் -மனைவியின் பிணங்களை ஒரே பாடையில் எடுத்துச் சென்று ஊரே அடக்கம் செய்தது.
இந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் மூழ்கடித்திருக்கிறது.