இந்திய ராணுவத்தின் முதன்மையான பணி பாகிஸ்தானின் மறைமுகப் போரை எதிர்ப்பதுதான்
ஸ்ரீநகர்:
பாகிஸ்தானின் மறைமுகப் போரை எதிர்ப்பதுதான் இந்திய ராணுவத்தின் முதன்மையான, முழுமையான பணியாக உள்ளது என்று ராணுவத் தளபதி எஸ். பத்மநாபன் தெரிவித்தார்.
ராணுவத் தளபதியாக பதவியேற்ற பிறகு முதன்மையாக காஷ்மீர் மாநிலத்துக்கு வந்த அவர், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாத இயக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம், எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்துவதன் மூலமும் இந்தியா மீது பாகிஸ்தான் மறைமுகப் போரை நடத்தி வருகிறது.
பாகிஸ்தானின் இந் நடவடிக்கையைத் தடுத்து பதில் தாக்குதல் நடத்துவதில்தான் இந்திய ராணுவம் அதிக கவனம் செலுத்து வருகிறது.
இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களைத் தயாரித்து வைத்திருந்தாலும், வழக்கமான படைபலத்தின் செயல்பாட்டை அது எந்த வகையிலும் பாதிக்காது.
அணு ஆயுதங்களை வைத்துள்ள எந்த நாடும் போரில் அந்த ஆயுதங்களைப் பயன்படுத்தாது. மேலும் அணு ஆயுதங்கள் போருக்கான ஆயுதங்களே அல்ல.
ஒரு நாட்டில் தீவிரவாதத்தை ஒழிக்க ராணுவத்தால் மட்டுமே முஐயாது. அது ஒரு அரசியல் பிரச்சினையாகும். ஜனநாயகத்தின் அனைத்துப் பிரிவுகளும் ஒன்றாகச் செயல்பட்டுத்தான் தீவிரவாதத்தை ஒழிக்கமுடியும்.
காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதம் அதிகரித்துள்ளதை மறக்கமுடியாது. அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில்தான் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது. ஆனால், அதற்கான காலக்கெடு என்ன என்பதை யாராலும் நிர்ணயிக்கமுடியாது.
பல நாடுகளிலும் பல ஆண்டுகளாக தீவிரவாதம் ஒழிக்கப்பட முடியாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது காஷ்மீர் மாநில மக்களே நிலைமையை உணர்ந்து கொண்டுள்ளனர்.
தீவிரவாதிகளின் நடவடிக்கையை அவர்கள் வெறுக்கத் தொடங்கிவிட்டனர். விரைவில் காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்பும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது என்றார் பத்மநாபன்.
ஐ.ஏ.என்.எஸ்