கைதான அதிமுக தொண்டர்களை விடுவிக்கக் கோருகிறார் ஜெ.
சென்னை:
டான்சி வழக்கில் சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்து தமிழகம் முழுவதிலும் போராட்டம் நடத்தி கைதாகியுள்ள அதிமுக தொண்டர்கள், தலைவர்களைவிடுதலை செய்ய வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
டான்சி வழக்கில் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டவர்களுக்கு சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
செவ்வாய்கிழமையும் இரண்டாவது நாளாக அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். கும்பகோணத்தில் ஒரு அரசு பஸ் எரிக்கப்பட்டது.வன்முறையில் ஈடுபட்ட அதிமுகவினர் 2000 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு முழுவதும் நீதிமன்ற தீர்ப்புக்கு முதல் நாளும், தீர்ப்பு வெளிவந்த பிறகும் அதிமுகவினரை தமிழக அரசு சிறையில் அடைத்து வருகிறது.
நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு அமைதி வழி அறப் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது திமுக அரசு கட்டவிழ்த்து விடும் கைது நடவடிக்கைகண்டிக்கத்தக்கது.
மதுரையில் பல்வேறு அராஜகம் செய்த ஆளும் திமுகவினர் மீது இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. அதே நேரத்தில் அமைதி வழி ஆர்ப்பாட்டத்தில்ஈடுபட்ட அவைத் தலைவர் காளிமுத்து உள்ளிட்டோரை கைது செய்து சிறையில் வைப்பது கருணாநிதியின் குரோத உணர்வு இன்னும் தீரவில்லை என்பதைத்தானேஎடுத்துக் காட்டுகிறது.
வன்முறையில் ஈடுபட்ட திமுகவினரை மீட்க காவல் நிலையத்துக்கே சென்று மிரட்டிய மகனோடு சமாதானம் செய்து கொள்ளும் கருணாநிதி,அதிமுகவினரிடம் காட்டும் பழிவாங்கும் உணர்ச்சியை கைவிட வேண்டும்.
சிறை வைக்கப்பட்ட அதிமுகவினர் குறித்து வேண்டுமென்றே தவறான குறைந்த எண்ணிக்கையை சொல்லி திசை திருப்பும் அரசு, அமைதி வழிபோராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.