அமர்நாத் படுகொலைக்காக ராஜினாமா செய்ய முன்வந்தேன் .. அத்வானி
டெல்லி:
அமர்நாத் யாத்ரீகர்கள் படுகொலை செய்யப்பட்டபோது தான் ராஜினாமா செய்ய முன்வந்ததாகவும் அதை பிரதமர் ஏற்க மறுத்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சர்அத்வானி கூறியுள்ளார்.
அமர்நாத்திற்கு புனித பயணம் மேற்கொண்டிருந்த 33 யாத்ரீகர்கள் ஆகஸ்ட் 1-ம் தேதிஜம்மு -காஷ்மீரில் கொல்லப்பட்டனர்.
இதுதொடர்பாக அத்வானி அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியதாவது:
எனது ராஜினாமா முடிவை பிரதமர் தவிர மேலும் பலரும் மாற்றிக் கொள்ளுமாறுகூறினர்.அவர்களில் காங்கிரஸ் கட்சியினரும் அடங்குவர். அவர்கள் என்னை தனியாகசந்தித்து ராஜினாமா செய்ய வேண்டாமென கேட்டுக் கொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சியின் ஒரு வருட ஆட்சி வருத்தமும், திருப்தியும் கலந்ததாகும்.வருத்தம் என்பது பலர் இறந்ததும், பாதுகாப்புப் படை வீரர்களால் பொதுமக்களின்உயிரை காப்பாற்ற முடியாததும்தான்.
திருப்தி என்பது தற்போது உலக நாடுகள் இந்தியாவில் ஏற்படும் பாதுகாப்பு தீவிரவாதபிரச்னைக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்பதை உணர்ந்து கொண்டுள்ளது தான்.
முன்பு ஐஎஸ்ஐ இந்தியாவில் பிரச்னைகளை தோற்றுவிக்கிறது என்று சொன்ன போதுமற்ற நாடுகள் அதை ஏற்கவில்லை. இப்போது ஐ.எஸ்.ஐ.யும் வெளிநாட்டுதீவிரவாதிகளும் இந்தியாவில் நடக்கும் வன்முறைக்கு காரணம் என உணர்ந்துள்ளனர்.ஐஎஸ்ஐ பாகிஸ்தான் ராணுவத்தின் ஒரு அங்கம்.
பெருமளவில் இந்து முஸ்லிம் பிரச்னை எதுவும் கடந்த ஆண்டில் ஏற்படவில்லை.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் எந்த முஸ்லீமும் பத்திரமாக இருக்கமுடியாது எனக் கூறப்பட்டது. ஆனால் வாஜ்பாய் அரசு பதவியேற்ற பின் மதசம்பந்தமான சண்டைகள் குறைந்துள்ளன என கூறியுள்ளார்.
வாஜ்பாய் பற்றி அத்வானி கூறுகையில், வாஜ்பாய் எனக்கும் மூத்த தலைவர். நான்கட்சியில் இணைந்தது முதல் அவர் எனது தலைவராக விளங்கி வருகிறார். அவரைப்போன்ற சிறந்த பிரதமரை நாட்டுக்குக் கொடுத்ததற்காக, நாங்கள் பெருமைகொள்கிறோம் என கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.