தேசீய மலரு க்கு அவமானமா- குமுறுகிறார் குமரியார்
தூத்துக்குடி:
தேசீய மலரான தாமரையை பாரதீய ஜனதா கட்சி சின்னமாக பயன்படுத்தக்கூடாது என்று குமரி அனந்தன் கூறினார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தனின் பொது வாழ்வு பொன் விழா தூத்துக்குடியில்கொண்டாடப்பட்டது. பாலவிநாயகர் கோவில் தெருவில் நடந்த இந்த விழாவுக்கு பாண்டிச்சேரி முதலமைச்சர் சண்முகம் தலைமைதாங்கினார்.
விழாவில் பேசிய குமரி அனந்தன், எனது வாழ்கை முழுவதும் தமிழ் மக்களுக்காகவும், காங்கிரஸ் இயக்கத்துக்காவும் பாடுபட்டுவந்துள்ளேன். தொடர்ந்து தமிழக மக்களுக்காகவும், காங்கிரஸ் பேரியக்கத்துக்காவும் என்னை நானே அர்பணித்துக்கொள்வேன்.
பாராளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கு அனுமதி பெற்றுத்தந்தவன் நான். அத்துடன் எனது கோரிக்கையினால்தான் கன்னடம்,ஒரியா, வங்காளம், தெலுங்கு, மலையாளம் போன்ற மாநில மொழிகளிலும், பேசுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நமது நாட்டில் மயிலையும், புலியையும் அரசியல் கட்சிகள் உள்பட அனைவரும் எதிலும் பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால்மயில் தேசிய பறவை. புலி தேசீய விலங்கு. இவற்றை எதிலாவது பயன்படுத்தினால் அது தேசத்தை அவமதிப்பது போன்றதாகும்.
நமது நாட்டின் தேசீயமலர் தாமரையாகும். சுதேசியம் பேசுகிறவர்கள் இந்த தாமரையான தேசீய மலரை தங்களது அரசியல்கட்சியின் சின்னமாக வைக்கலாமா? இது நமது தேசத்தை அவமதிப்பதாகாதா? எனவே பாரதீய ஜனதா கட்சியினர் தேசீயமலரான தாமரையை தங்களது தேர்தல் சின்னமாக பயன்படுத்தக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.
தேசீய சின்னத்திலேயே முத்திரை குத்தி நாம் அதை அவமதிக்கலாமா? காமராஜர் வழியில் எனது அரசியல் பொது வாழ்வைநடத்தி வரும் நான் அதே பாதையில் தொடர்ந்து நடப்பேன். இதற்கு தேசியவாதிகள் அனைவரும் ஆதரவும், ஆசியும் வழங்கவேண்டும்.
இவ்வாறு குமரி அனந்தன் பேசினார்.