தங்கம் வென்ற தங்கங்கள்
கேள்வி - பதில்
கே: வீரப்பன் விவகாரத்தில் இரு மாநில அரசுகளின் செயல்பாடுகளையும் சாடும்நீங்கள், அதற்கு மாற்றாக ஓர் உருப்படியான யோசனையைக் கூறவேண்டியதுதானே?
ப: ஆரம்பத்திலேயே பெரும் தவறு நடந்துவிட்ட பிறகு, கூறுவதற்கு என்ன இருக்கிறது. வீரப்பன் ஒரு தூதுவரை அனுப்புங்கள் என்ற போது,அவனுக்காக பிரசாரம் செய்தவரை, தமிழக அரசு தூதுவராக அனுப்பியது.
அடுத்து அவனிடமிருந்து விபரீதமான கோரிக்கைகள் வந்தவுடனேயே, ஆஹா! அதற்கென்ன? எல்லாம் செய்து விடுகிறோம் என்று இரு மாநிலஅரசுகள் கூறிவிட்டன.
இவர்கள் தங்களுடைய பலவீனத்தை இப்படி பறை சாற்றியிருக்கக்கூடாது. எல்லாமே நிறைவேற்ற முடியாத கோரிக்கைகள் என்ற நிலையில்ஆரம்பித்திருந்தால், ஒரு சில கோரிக்கைகளை விட்டுக் கொடுத்தே, காரியத்தை சாதித்திருக்கலாம். இதை நான் இந்த விவகாரம் தொடங்கியபோதேகூறினேன்.
கே: டான்சி வழக்கு தீர்ப்புக்குப் பிறகு, அ.தி.மு.க. வுடனான கூட்டணி பற்றி, தனது நிலையை த.மா.கா. தலைவர் மூப்பனார் மாற்றிக் கொள்ள வாய்ப்புஇருப்பதாகக் கருதுகிறீர்களா?
ப:அப்படி எனக்குத் தோன்றவில்லை.
கே: இன்று சசிகலாவுக்கு பொதுக்குழு உறுப்பினர் பதவி தந்த ஸ்ரீஜெயலலிதா, நாளை என்ன தருவார்...?
ப: அ.இ.அ.தி.மு.க.வுக்குப் பதவி கிடைத்தால், அதை ஜெயலலிதா தருவார்; பதவி கிட்டவில்லை என்றால் என்ன தருவது?இதில் பொருள்உண்டல்லவா?
கே: இந்து முன்னணி, இந்து சமயத்தைக் காக்கும் அல்சேஷன் நாய் என்று ராம கோபாலன் கூறியுள்ளாரே...?
ப: சரி. நல்லது. ரேபீஸ் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கே: இன்றைய நிலையில் ஜெயலலிதா, மீண்டும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று முதல்வராக முடியுமா?
ப: நிற்பது, கேள்விக்குறி; நின்று வென்று முதல்வரானால் ஆச்சரியக்குறி.
கே: பா.ஜ.க.வின் அடிப்படைக் கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்று வெங்கைய நாயுடு கூறியுள்ளாரே? இவர்களின் அடிப்படைக்கொள்கை என்ன?
ப: இப்போதைக்கு அடிப்படைக் கொள்கை - பதவியில் தொடர வேண்டும். அதை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். வெங்கைய நாயுடு கூறுவதுஉண்மைதான்.
கே: விமர்சகர் சுப்புடுவுக்கும், தங்களுக்கும் விமர்சனம் செய்வதைத் தவிர, வேறு ஒன்றும் தெரியாது - என்று கூறுபவர்களைப் பற்றி ...?
ப: அப்படிச் சொல்ல முடியாது. அவருக்குப் பாடவும் தெரியும்.
கே: மற்ற வி.ஐ.பி.க்கள் மாதிரி பெயருக்குப் பின்னால் பட்டத்தையோ, பதவியையோ நீங்கள் போட்டுக் கொள்வதில்லையே, ஏன்? இதையெல்லாம்ஒரு தகுதியாக நீங்கள் நினைக்கவில்லையா?
ப: பட்டத்தையும், பதவியையும் அசிங்கப்படுத்த விரும்பவில்லை என்றும் வைத்துக் கொள்ளலாமே!
கே: சோ என்றாலே அவர் பெரிய அறிவாளி என்கிற மாதிரி பேசி விட்டு ஒதுங்குகிறார்களே, ஏன் சார்?
ப: அந்த மாதிரி சொல்லி விட்டு, அந்த இடத்திலேயே நிற்பதற்கு ஒரு மாதிரி யாக இருக்காதா? அதனால்தான் ஒதுங்கி விடுகிறார்கள்.
கே: ஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பால் தி.மு.க. வுக்குப் பலமா? பலவீனமா?
ப: பலம்தான். எந்த அளவுக்கு என்பதுதான் புரியவில்லை.
கே: வீரப்பன் விஷயத்தில் கடும் கண்டனத்தை வாங்கியும், தமிழக - கர்நாடக அரசுகள் போக்கு மாறவில்லையே?
ப: வீரப்பனால் ராஜ்குமார் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறபோது - இந்த கண்டனங்கள் எல்லாம் மறைந்துவிடும்; என்ன தரப்பட்டது என்றகேள்வியும் எழாது; ராஜ்குமார் மீட்பு என்பது மட்டுமே மக்கள் மனதில் நின்று, தங்களுக்கு நல்ல அறுவடை கிடைக்கும் என்று இரு மாநிலஅரசுகளும் நம்புகின்றன.
சாதரணமாக மக்கள் மனப்போக்கு எப்படி அமைகிறது என்பதை நினைத்துப் பார்த்தால், இவர்களுடைய நம்பிக்கை அர்த்தமற்றதல்ல என்பது புரியும்.
கே: வீரப்பன் பிரச்சினையில் சில உண்மைகளை, நாட்டின் நலன் கருதி இரு மாநில அரசுகளும் மறைத்திருந்தால், அதில் என்ன தவறு?
ப: சில உண்மைகளையாவது சொல்லியிருந்தால், தவறு இருந்திருக்காது.
கே: மான்யங்களைக் குறைத்து, விலைகளை உயர்த்த வேண்டுமானால், தில் வேண்டும். அது பா.ஜ.க.விடம் நிறையவே இருக்கிறது- என்கிறார் என்நண்பர். இது உண்மையா?
ப: இது தில் சம்பந்தப்பட்டது அல்ல; பில் சம்பந்தப்பட்டது. சர்வதேச நிதி அமைப்புகள் தருகிற பில் நமக்கு இந்த மான்யக் குறைப்பு அவசியத்தைஏற்படுத்துகிறது.
கே: ஜெயலலிதாவுக்குக் கிடைத்த தீரப்பு - வருகிற தேர்தலில் அவருக்குச் சாதகமாக, அனுதாப அலை வீச ஏதுவாக அமையும் வாய்ப்புஇருக்கிறதா?
ப: நான் அப்படி நினைக்கவில்லை.
கே: அ.தி.மு.க.வின் பொதுக்குழு உறுப்பினராக அவசர அவசரமாக, சசிகலா நியமிக்கப்பட்டதன் காரணம் என்ன?
ப: நான் கேள்விப்பட்டது இதுதான்: தீர்ப்புக்கு முன் தினம் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு எதிராகவே தீர்ப்பு வரும் என்றும்,சசிகலாவுக்கு விடுதலை நிச்சயம் என்றும், சசிகலாவிடம் சிலர் கூறியிருந்தனர்; அதை நம்பி சசிகலா,ஜெயலலிதா இல்லாத நேரத்தில் தனக்கு கட்சியில்அதிகாரம் அவசியம் என்று வற்புறுத்தி, இந்த பதவியைப் பெற்றார்; அடுத்த தினம் இருவருக்குமே எதிராக தீர்ப்பு வந்தபோது, இந்தப் பதவிநியமனம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது; அதை நிறுத்துவதற்கு நேரம் இல்லாமற் போய் விட்டது.
ஜெயலலிதா இல்லாதபோது, கட்சியில் முக்கியத்துவம் பெற்று விட சசிகலா செய்த ஏற்பாடு பயனற்றதாகி விட்டது. இப்படி நான் கேள்விப்பட்ட செய்தி,சரியாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
கே: இன்றைய அரசியல் சூழலுக்கு தகுந்தபடி.முகம்மது பின் துக்ளக்கை மாற்றி அமைக்கும்படி ஆனந்த விகடன் வேண்டுகோள் விடுத்துள்ளதே!கவனித்தீர்களா?
ப: என் நாடகத்திற்கு தக்கபடி, இன்றைய அரசியல் சூழ்நிலை தொடர்கிற போது, நாடகத்தை மாற்றியமைக்கும் அவசியம் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை.