கோவையில் தொடங்கியது "மெடிடெக்ஸ் 2000 கண்காட்சி
கோவை:
கோவையில் மெடிடெக்ஸ் 2000 கண்காட்சி மற்றும் மருத்துவக் கருத்தரங்கு துவங்கியது.
கோவையில் இந்திய மெடிக்கல் கவுன்சில் நடத்தும் மருத்துவக் கண்காட்சி மெடிடெக்ஸ் 2000 துவங்கியது. இந்த விழாவைத் துவக்கி வைத்து தமிழ்நாடுசுகாதாரத் துறைச் செயலர் திரிபாதி பேசியதாவது:
மருத்துவத் துறையில் அதி நவீனத் தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்று வருகிறது. இந்தத் துறையில் ஏற்படும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப டாக்டர்கள்தங்களது அறிவை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
இந்தத் தொழில் நுட்ப வளர்ச்சியை மேம்படுத்தவும், ஆய்வுகள் மேற்கொள்ளவும் டாக்டர்கள் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். மேலும்நவீன மருத்துவ அறிவை அறிந்து கொள்ளும் ஒவ்வொரு டாக்டர்களும் வேறு டாக்டர்களுடன் அவற்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா, யுனானி, ஆயுர்வேத மருந்துகளையும் அலோபதி மருத்துவ முறைக்கு ஏற்றதாக இருந்தால் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உதாரணமாக கீழாநெல்லி மஞ்சள் காமலையைக் குணப்படுத்தும் மருத்துவக் குணம் வாய்ந்ததை அலோபதி டாக்டர்கள்உணர்ந்துள்ளனர்.
அலோபதி மருத்துவம், மற்ற சித்தா, மற்றும் ஆயுர்வேத மருத்துவங்கள் இணைந்து செயல்பட வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்படும். நவீன மருத்துவம்சாதாரண மக்களும், ஏழை எளியவர்களும் பயன்படும் வகையில் எளிமையாக்கப்பட வேண்டும் என்றார் திரி பாதி.
விழாவில் டாக்டர் எம்.ஜி.ஆர்.,பல்கலைக் கழக துணைவேந்தர் ஆனந்தக் கண்ணன் பேசியதாவது;
இந்தியாவில் நுண்ணியிரி மருத்துவம் பெருமளவில் முன்னேறியுள்ளது. இந்த மருத்துவத் துறையில் தேவையான ஆய்வுகளை நாம் மேற்கொள்ளவேண்டியுள்ளோம். டாக்டர்களுக்கும் நோயாளிகளுக்கும் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்க்க தனி கமிட்டி ஒன்றை அமைத்துச் செயல்படுத்த வேண்டும்என்றார்.
விழாவில் இந்திய மெடிக்கல் கவுன்சில் கோவைக் கிளைத் தலைவர் தங்கவேல் வரவேற்றார்.