அரசியல் நடத்துவது நோக்கமல்ல - சந்திரபாபு நாயுடு
ஹைதராபாத்:
அரசியல் நடத்துவது எனது நோக்கமல்ல. நாட்டின் வளர்ச்சிதான் எனக்கு முக்கியம்என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
தூரக் கிழக்கு நாடுகளுக்கு 11 நாடுகள் சுற்றுப்பயணம் செய்துவிட்டு ஞாயிற்றுக்கிழமைஹைதராபாத் திரும்பிய அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் தெலுங்கு தேசம் சேராது.வெளியிலிருந்தே ஆதரவு தரும்.
எனது கருத்துக்களைச் செயல்படுத்த மத்திய அரசில் சேர்ந்தால் நன்றாக இருக்கும்என்று சிலர் யோசனை கூறினர். ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை. மத்தியஅரசில் சேர்ந்த உடனே ஒரே இரவில் எல்லாவற்றையும் செயல்படுத்திவிடமுடியாது.
வெளியில் இருந்து மத்திய அரசுக்கு ஆதரவு தருவதன் மூலம் நினைத்ததை சாதிக்கமுடியும். அரசியல் செய்வது என்பது எனது நோக்கமல்ல. நாட்டின் வளர்ச்சி வேகமாகஇருக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பம்.
நாட்டு மக்கள் தங்களது உரிமைகளைப் பெறவேண்டும். அதற்காகஅரசியல்வாதிகளும் அரசும் பாடுபடவேண்டும்.
தூரக் கிழக்கு நாடுகளுக்கு மேற்கொண்ட பயணம் பயனுள்ளதாக இருந்தது. அந்தநாடுகள் எல்லாம் அரசியலுக்கு முக்கியத்துவம் தராமல் நாட்டின் வளர்ச்சிக்குத் தான்அதிக முக்கியத்துவம் தருகின்றன.
அதுதான் அந் நாட்டின் முதன்மையான, ஒரே கொள்கை. அந்த வகையில் அந்தநாடுகள் செயல்படுவதால்தான் அவை முன்னேற்றம் கண்டு வருகின்றன. ஆனால்,இந்தியாவிலோ எல்லாம் அரசியல்மயம்தான்.
தொடர்ந்து நாம் அதே பாதையில் சென்றால் எதிர்கால சமுதாயம் நம்மை மதிக்காது.நாடும் வளராது. நாட்டின் வளர்ச்சிதான் முக்கியம் என்பதை நாட்டு மக்களும்,அரசியல்வாதிகளும் உணர்ந்து செயல்படவேண்டும்.
இந்தியாவில் உள்ள திறமை வாய்ந்த சாப்ட்வேர் நிபுணர்கள் மீது உலக நாடுகள் கண்வைத்துள்ளன. தற்போதைய தகவல் தொழில்நுட்பப் புரட்சியைப் பயன்படுத்திஇந்தியா முன்னேற நாம் பாடுபடவேண்டும்.
ஏற்கெனவே விவசாயப் புரட்சி மற்றும் தொழில் புரட்சிகளைப் பயன்படுத்திக் கொளளஇந்தியா தவறிவிட்டது. ஆனால், இப்போதைய தகவல் தொழில்நுட்பப் புரட்சியைஇந்தியா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார் சந்திரபாபு நாயுடு.
யு.என்.ஐ.