மேட்ச் பிக்ஸிங்: இலங்கை வீரர்களை விசாரிக்க குழு
கொழும்பு:
மேட்ச் பிக்சிங்கில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர்கள் ரனதுங்கா மற்றும் அரவிந்த டிசில்வா குறித்து விசாரணைநடத்துவதற்காக இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வக்கீல்கள் குழுவை அமைத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் திலங்கா சுமதிபாலா இதுகுறித்துக் கூறியதாவது:
இலங்கை கிரிக்கெட் அணியில் இரண்டு வீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது. அவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டார்களா?இல்லையா? என்பது குறித்து விசாரிக்க அதிபரின் ஆலோசகர் மற்றும் மனித உரிமைக் கழகத் தொண்டர் டேஷ்மண்ட் பெர்னான்டோ ஆகியோர் கொண்டகுழு நியமிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 வருடங்களாக இலங்கை அணி பங்குபெற்ற அனைத்து கிரிக்கெட் போட்டிகள் குறித்தும் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். எந்தெந்தநாடுகளில் கிரிக்கெட் போட்டி நடந்தது? மேட்ச் பிக்சிங் விஷயத்தில் இலங்கை வீரர்கள் எப்படி அகப்பட்டனர்? போன்ற அனைத்து விஷயங்கள் குறித்தும்விசாரணை நடத்துவோம். இந்தியா உள்பட கிரிக்கெட் போட்டிகள் நடந்த நாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தப்படும் என்றார்.
கடந்த வாரம் சுமதி பாலா, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு எழுதியுள்ள கடிததத்தில் கிரிக்கெட் சூதாட்டம் குறித்து, சிபிஐ சமர்பித்துள்ளகடித நகலை தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னதாக, இந்திய சிபிஐ குழு, மேட்ச் பிக்சிங்கில் தொடர்புடைய இந்திய வீரர்கள் குறித்து சமர்பித்த அறிக்கையில், இலங்கையைச் சேர்ந்த அர்ஜூனாரணதுங்கா மற்றும் உதவி கேப்டன் அரவிந்த டி சில்வா ஆகியோருக்கும் மேட்ச் பிக்சிங்கில் தொடர்புடையதாக குற்றம் கூறியுள்ளது.
தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை இருவரும் மறுத்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.