தாமிரபரணியை சுத்தப்படுத்த ரூ. 60 கோடி
சென்னை:
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாமிரபரணி ஆற்றைச் சுத்தப்படுத்த ரூ. 60 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறைஅமைச்சர் டி.ஆர்.பாலு கூறினார்.
நெல்லை வந்திருந்த டி.ஆர்.பாலு, தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்துவது தொடர்பான திட்டம் குறித்து அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள்,எம்.பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். நெல்லை மாநகருக்குள் எந்தெந்த இடங்களில் இருந்து கழிவுகள் தாமிரபரணி ஆற்றில் கலக்கிறது என்பதுபடக்காட்சி மூலம் அமைச்சருக்கு விளக்கிக் காட்டப்பட்டது.
இதைத்தொடர்ந்து அமைச்சர் டி.ஆர்.பாலு தாமிரபரணியில் கழிவு நீர் கலக்கும் இடங்களை பார்வையிட்டார். நெல்லை சந்திப்பு, கைலாசபுரம், வேடுவர் காலனி,வீரராகவபுரம், சிந்துபூந்துறை ஆகிய இடங்களில் அவர் ஆற்றில் இறங்கி பார்வையிட்டார்.
பின்னர், அவர் கொக்கிரகுளத்தில் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மீண்டும் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின்னர்நிருபர்களைச் சந்தித்த அவர்,
திருநெல்வேலியில் ஓடுகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தாமிரபரணி ஆறு மாசுபடுவதைத் தடுத்து நிறுத்தத் திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்றுமுதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம், மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை மத்திய அரசுடன்இணைந்து தாமிரபரணி ஆற்றை சுத்தப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்ற முன் வந்துள்ளன.
செவ்வாய்க்கிழமை மத்திய, மாநில அரசு அதிகாரிகள், மேயர், ஆணையாளர் ஆகியோருடன் சென்று தாமிரபரணி ஆற்றில் பல்வேறு இடங்களில் கழிவு நீர்கலப்பதை பார்வையிட்டேன்.
தீவிர ஆலோசனைக்குப் பின் தேசிய பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ. 60 கோடி செலவில் தாமிரபரணியை சுத்தப்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இதில்நெல்லையில் பாதாள சாக்கடை கட்டும் திட்டமும் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதிக்கு பாதாள சாக்கடை திட்டத்தில் 91 ஆயிரம் வீடுகளுக்குஇணைப்பு கொடுப்பதின் மூலம் ரூ. 25 கோடி நிதி திரட்டுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போல, எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ. 5 கோடி நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசிய நதி பாதுகாப்பு திட்டத்தில்இருந்து ரூ. 20 கோடி மானியமாகவும் கொடுக்கப்படும்.
இந்தத் திட்டத்தை இரண்டு கட்டங்களாக செயல்படுத்தவுள்ளோம். டிசம்பர் மாதம் முதல் கட்டப்பணிகள் ரூ. 10 கோடி செலவில் ஆரம்பிக்கப்படும். அடுத்தமூன்றாண்டுகளில் பணிகள் நிறைவடையும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்