மதுரை பளு தூக்கும் வீராங்கனைக்கு ஜெ.உதவி
மதுரை:
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, மதுரையில் பளு தூக்கும் வீராங்கனை செல்வி வினுவுக்கு ரூ 1 லட்சம் வைப்பு நிதிக்கான பத்திரங்களை வழங்கினார்.இந்த உதவி தமிழகத்தின் மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்.அறக்கட்டளை சார்பில் வழங்கப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த செல்வி வினு மாலை நேரக் கல்லூரியில் படித்துக் கொண்டே பளு தூக்கும் போட்டியில் 48 கிலோ பிரிவில் தொடர்நது 3 ஆண்டுகளாகதென்னிந்தியாவில் இரண்டாவது இடத்திலும், தமிழகத்தில் முதல் இடத்திலும் பெற்று தங்கப் பதக்கம் பெற்றுள்ளார்.
கடந்த வாரம் ஜெயலலிதா, மதுரை வந்திருந்த போது, செல்வி வினு விளையாட்டுத் துறையில் பிரகாசிக்க உதவிகள் செய்யுமாறு, ஜெயலலிதாவிடம் மனுக்கொடுத்தார். மனுவில், தனது திறமையை வளர்த்துக் கொள்வதற்காக தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கும், அரசுக்கும் பலமுறைவிண்ணப்பித்திருந்தேன். ஆனால், உரிய உதவி கிடைக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஜெயலலிதா, அவருக்கு அடிப்படை உணவு வசதி மற்றும் பயிற்சிக்குத் தேவையான உதவியை வழங்கும் வகையில் 1,00,000 ரூபாய் வைப்பு நிதி வைக்கப்பட்டு அதன் மூலம் பெறப்படும் வட்டியைப் பளு தூக்கும் பயிற்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளவும், பளு தூக்கும் பயிற்சிநிலையத்துக்குச் செல்லும் வகையில் டிவிஎஸ் சேம்ப் இரண்டு சக்கர வாகனம் ஒன்றையும் வழங்கினார்.
உதவிகளை வழங்கி செல்வி வினுவைப் பாராட்டிய ஜெயலலிதா, அவரிடம் உங்கள் பளு தூக்கும் திறமையை வளர்த்துக் கொண்டு இந்தியாவில் மட்டுமின்றிஉலக அளவில் இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமையை சேர்க்கும் வகையில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கம் பெற வேண்டும்என்று வாழ்த்தினார்.