கலெக்டர்கள் மாநாடு.. கணக்கு காட்டும் கருணாநிதி
சென்னை:
திமுக ஆட்சியில் தான் ஒன்பது தடவை மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடத்தப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
சென்னை கோட்டையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடை பெற்றது.
மாநாட்டில் அரசு நலத் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. முன்னதாக மாநாட்டை தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
பொது விநியோகத் திட்டத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பாக நடத்த மாவட்ட கலெக்டர்களும் மற்ற அதிகாரிகளும் உன்னிப்பாக கவனம்செலுத்த வேண்டும்.
இப்போது நல்ல முறையில் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது என்றாலும் கூட எங்கு குறைகள் காணப்பட்டாலும் அல்லது குறை கூறப்பட்டாலும்உடனடியாக அதை கவனிக்கிற அக்கறையும் ஆர்வமும் மாவட்ட கலெக்டர்களுக்கு நிரம்பத் தேவை.
மகளிர் முன்னேற்றத்திற்காக இந்த அரசு பல திட்டங்களை தீட்டி இருக்கிறது. பொருளாதாரத் துறையில் மகளிருக்கு ஒரு ஆக்கத்தைஉருவாக்குவதற்காக மகளிர் சிறுவணிக கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
குடிநீர் வசதி, தெரு விளக்குகள் போன்ற வசதிகள் எல்லா பகுதிகளிலும் செய்து தருவதற்கான முயற்சிகளை எப்படி மேற்கொள்வது என்பதை பற்றி இங்கேவிவாதிக்க உள்ளோம்.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு இந்த அரசு மிகுந்த முனைப்போடு பணியாற்றி வருகிறது.
அந்த அடிப்படை வசதிகளை நகர்ப்புறங்களில் மாத்திரம் அல்லாமல் கிராமப் புறங்களில் இன்றைக்கு பெருமளவு செய்து தரப்படுகிறது என்று சொன்னாலும்கூட மேலும் மேலும் அவைகளை செய்து தருவதற்கான ஆக்கம், ஊக்கம் மாவட்ட கலெக்டர்களிடம் அமைய வேண்டும்.
மகளிர் சுய உதவிக் குழுக்கள், உழவர் சந்தை போன்ற திட்டங்களையும் மாவட்ட கலெக்டர்கள் கவனிக்க வேண்டும்.
வரும் முன் காப்போம் திட்டம் எல்லா மாநிலங்களுக்கும் வழிகாட்டக் கூடிய வகையில் செயல் படுத்தப்படுகிறது. அதை ஒவ்வொரு மாவட்டத்திலும்விரிவு படுத்த வேண்டும்.
சிற்றுந்து - மினி பஸ் இதுவரை 2000 என்றளவில் தமிழகத்தில் ஓடுகின்றன. இன்னும் குக்கிராமங்களில் அங்குள்ள மக்கள் பயன் அடைகிற அளவிற்குஇந்த திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
சமத்துவபுரம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்தும் இந்த கூட்டத்தில் நாம் ஆராய வேண்டும்.
இது 9-வது மாவட்ட கலெக்டர்கள் மாநாடு. இப்படி அடிக்கடி மாவட்ட கலெக்டர்கள் மாநாடு நடத்தப் படுவதில்லை. இந்த அரசு வந்த பிறகு 9மாநாடுகள் நடைபெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சம்.
அடிக்கடி இப்படிப்பட்ட மாநாடுகள், வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் நடத்துவதற்கு காரணம், மக்களுடைய தேவைகளை உணர்ந்து நாம்ஈடுபடுகின்ற பணிகளை மேலும் மேம்படுத்த வேண்டுமென்ற அந்த உணர்வை பெற்றிருக்கிறோம் என்றார் முதல்வர் கருணாநிதி.
மாநாட்டில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முத்துசாமி, அரசு துறை செயலாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications