போக்குவரத்து பணியாளர்களுக்கு யோகா பயிற்சி
சென்னை:
போக்குவரத்து பணியாளர்களுக்கு சமூக சேவை நிறுவனங்களின் உதவியுடன் யோகா கற்றுத் தரப்படும் என்று மாநகர போக்குவரத்து கழகமேலாண்மை இயக்குநர் ஸ்வரன்சிங் செவ்வாய்க்கிழமை கூறினார்.
வட சென்னை ரோட்டரி சங்கம் சார்பில் மாநகர போக்குவரத்து கழகத்தில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு விருது வழங்கும் விழாதிருவொற்றியூர் சுங்கச்சாவடி பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு ஒளிவண்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் நடராஜன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு போக்குவரத்துக் கழகசெயலாளர் மாதவன் நம்பியார் தொழில்நுட்ப உதவியாளர்கள், பொறியாளர்களுக்கு விருதுகள் வழங்கி பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னை மாநகர போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் ஸ்வரண்சிங் பேசும்போது, மற்றமாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் தான் போக்குவரத்துக் கழகம் சேவை மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது.
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நாம் செயல்பட வேண்டும். ஓட்டுனர்கள், நடத்துநர்கள் மக்களிடம் நல்ல அணுகுமுறையோடு செயல்படுகின்றனர்.அது போல் அதிகாரிகளும் நடந்து கொள்ள வேண்டும். 95-ம் ஆண்டு ஆறாயிரத்து 735 ஆக இருந்த போக்குவரத்து விபத்துக்கள் தற்பொழுதுஇரண்டாயிரத்து 337 ஆக குறைந்துள்ளது. இது மேலும் குறைய வேண்டும்.
ஏதேனும் சமூக சேவை நிறுவனங்கள் உதவியோடு அதிகாரிகள், ஓட்டுனர்கள், நடத்துநர்களுக்கும் யோகா கற்றுத் தர ஏற்பாடு செய்யப்படும். நீங்கள்சிறப்பாக செயல்பட்டு கழகத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார் ஸ்வரண் சிங்.