வீரப்பன் காட்டில் சிக்கிய சி.டி. கேசட்கள்
ஈரோடு:
அதிரடிப் படையின் முதல் நடவடிக்கையில், திம்பம் வனப் பகுதியில் உள்ள கல்குவாரி ஒன்றிலிருந்து ஏராளமான சிடி கேஸட்டுக்கள், மருந்துப் பொருட்கள் கிடைத்துள்ளன.
வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக, கர்நாடக அதிரடிப் படை போலீஸார் செவ்வாய்க்கிழமை காலை திம்பம் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர்.
பண்ணாரியிலிருந்து திம்பம் செல்லும் வனப்பகுதியில் தனியார் கல் குவாரிகள் உள்ளன. இந்தக் கல்குவாரி ஒன்றில் அதிரடிப் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
அங்கு ஏராளமான வெடிப்பொருட்கள், சிடி கேசட்டுக்கள் மற்றும் மருந்துப் பொருட்கள் பெருமளவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவற்றை அதிரடிப்படைப் போலீஸார் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே வீரப்பன் தங்கியுள்ள காட்டிற்குப் பெருமளவில் வெடிப் பொருட்கள் மற்றும் ஆயுதங்கள் கடத்திச் செல்லபபட்டிருப்பதாக உளவுத்துறைபோலீஸார் எச்சரித்திருந்தனர்.
இந்நிலையில் வனப்பகுதியில் வெடிப்பொருட்கள் மற்றும் சிடி கேசட்டுக்கள் கிடைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிரடிப்படைக்கு ஆயுதங்கள்:
இதற்கிடையே, தமிழக அதிரடிப்படைக்குத் தேவையான ஆயுதங்கள், கையெறி குண்டுகள் மற்றும் ஒயர்லெஸ் கருவிகள் போன்றவை அனுப்பிவைக்கப்படுகின்றன.
சென்னையிலிருந்து இவை விசேஷ பாதுகாப்புடன் அனுப்பப்படுகின்றன. ஏகே 47 ரக துப்பாக்கிகள், பெட்டி பெட்டியாக கையெறி குண்டுகள் மற்றும்அதிரடிப்படையினர் பயன்படுத்துவதற்காக ஒயர்லெஸ் கருவிகள், இரவில் பார்க்கும் பைனாகுலர்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.
இரண்டு வேன்கள் நிறைய ஆயுதங்களும், கருவிகளும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அதிரடிப்படை முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.