ராணுவ உதவியை நாடுகிறார் கர்நாடக முதல்வர்
பெங்களூர்:
வீரப்பனைப் பிடிப்பதற்காக, மத்திய அரசிடம் ராணுவ உதவி கேட்கத் திட்டமிட்டுள்ளதாக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா செவ்வாய்க்கிழமை சட்டசபையில்அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, மத்திய அரசிடம் ராணுவ உதவி கோரும் வகையில் டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயை நேரில் சந்திக்க கிருஷ்ணா முடிவு செய்துள்ளார்.
நடிகர் ராஜ்குமார் கடத்தல் மற்றும் அவர் மீட்கப்பட்ட விஷயம் குறித்து கர்நாடக சட்டசபையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று முதல்வர்கிருஷ்ணா தெரிவித்திருந்தார்.
அதன்படி, செவ்வாய்க்கிழமை சட்டசபையில் அறிக்கை தாக்கல் செய்து பேசினார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த ஜூலை மாதம் நடிகர் ராஜ்குமார், வீரப்பனால் கடத்தப்பட்டார். 108 நாட்களுக்குப் பிறகு பல்வேறு பிரச்சனைகளைக் கடந்து அவர் மீட்கப்பட்டு விட்டார்.
வீரப்பன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை நிறை வேற்றினால்தான் ராஜ்குமாரை விடுவிப்பேன் என்ற தனது நிலையில் மிகவும்பிடிவாதமாக இருந்தார். இதனால் ராஜ்குமார் மீட்கப்படும் விஷயத்தில் காலதாமதம் ஏற்பட்டது.
மேலும் வீரப்பனின் முக்கிய நிபந்தனைகளான மைசூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தடா கைதிகள் விடுதலை மற்றும் தமிழ்த் தீவிரவாதிகள் விடுதலைஇன்னும் நிறை வேற்றப்படவில்லை.
இவர்களை விடுவிக்க தமிழக, கர்நாடக அரசுகள் முடிவு செய்திருந்த போதிலும், சுப்ரீம் கோர்ட் இவர்களது விடுதலையை நிறுத்தி வைத்தது.
ஏனெனில் வீரப்பனால் சுட்டுக் கொல்லப்பட்ட கர்நாடக எஸ்.ஐ.ஷகீல் அகமதுவின் தந்தை அப்துல் கரீம் சுப்ரீம் கோர்ட்டில் தடா கைதிகளைவிடுவிக்கக் கூடாது என்று வழக்குத் தொடர்ந்தார். இதையடுத்து ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் ஒரு வித தேக்க நிலையே தொடர்ந்து இருந்தது.
இதைத்தொடர்ந்து ராஜ்குமாரை நலமுடன் மீட்க அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் பல்வேறு சங்க அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.மேலும் கர்நாடக மக்களும் தொடர்ந்து அமைதி காத்தனர்.
இதற்கிடையே கர்நாடக அரசு, மத்திய அரசின் உதவி கேட்டு 10.10.2000 அன்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியது. 20.10.2000 அன்று மத்தியஅரசிடமிருந்து பதில் வந்தது. அதில், ராஜ்குமார் மீட்பு விஷயத்தில் இரு மாநில அரகளுக்கும், மத்திய அரசு அனைத்து விதமான உதவிகளையும் செய்யத்தயாராக இருப்பதாக அறிவித்தது.
அதற்குப் பின் வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த பேராசிரியர் சுகுமாறன், கல்யாணி ஆகியோரை அனுப்புவது என்று முடிவெடுக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை நல்ல முறையில் நடைபெற அனைத்து தரப்பினரும் உதவி செய்தனர். ராஜ்குமார் விடுதலைக்காக மத்திய அரசு, தமிழகம் செய்தஉதவிகளுக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ராஜ்குமார் மீட்பு விவகாரத்தில் உதவி செய்த தமிழக முதல்வர் கருணாநிதி, பிரதமர் வாஜ்பாய், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி ஆகியோருக்குகர்நாடகம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
சென்னை விரைகிறார் கர்நாடக டிஜிபி:
கர்நாடக போலீஸ் டிஜிபி தினகர் புதன்கிழமை சென்னைக்குச் சென்று தமிழக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது வீரப்பனைப்பிடிக்கும் நடவடிக்கையில் தமிழக அரசுடன், கர்நாடக அரசு இணைந்து செயல்படுவது எப்படி என்பது குறித்து விவாதிப்பார்.
பின்னர் நான் விரைவில் டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாய் மற்றும் உள்துறை அமைச்சர் அத்வானியை சந்தித்து, வீரப்பனைப் பிடிக்க ராணுவ உதவிசெய்யுமாறு மத்திய அரசிடம் கேட்பேன் என்றார் கிருஷ்ணா.












Click it and Unblock the Notifications