ஒரே நேரத்தில் 100+ இஸ்ரோ விஞ்ஞானிகள் ராஜினாமா.. கடும் கோபத்தில் விண்வெளி துறை.. என்ன நடக்கிறது?
டெல்லி: இந்தியாவின் முக்கிய விண்வெளி திட்டங்களில் ஒன்றாக உள்ள ககன்யான் உட்பட பல முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் பணியாற்றும் இஸ்ரோல விஞ்ஞானிகள் திடீரென அதிகளவில் ராஜினாமா செய்துள்ளனர். இது பேசுபொருளாகியுள்ள நிலையில், அதை தடுத்து நிறுத்த இஸ்ரோ மற்றும் மத்திய விண்வெளித் துறை புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்துள்ளது.
உலகின் மிக சிறந்த விண்வெளி ஆய்வு அமைப்புகளில் ஒன்றாக இஸ்ரோல இருக்கிறது. சந்திரயான் தொடங்கி பல விண்வெளி திட்டங்களை இஸ்ரோ சத்தமே இல்லாமல் சாதித்துள்ளது. இதற்கிடையே இப்போது இஸ்ரோவில் வேலை செய்யும் பல விஞ்ஞானிகள் திடீரென ராஜினாமா செய்வது சர்ச்சையாக வெடித்துள்ளது.

கட்டுப்பாடு
இதை தடுக்க இப்போது இஸ்ரோ மற்றும் மத்திய விண்வெளித் துறை புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக கடந்த ஜூலை 14ம் தேதி விரிவான உத்தரவு வெளியிடப்பட்டது. அந்த உத்தரவில், ககன்யான் மற்றும் பிற முக்கிய விண்வெளித் திட்டங்களில் பணியாற்றும் குரூப் A சயின்ஸ் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகளின் விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா கோரிக்கைகளை நேரடியாக ஏற்கக் கூடாது என்று இஸ்ரோ மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனிமேல் இதுபோன்ற அனைத்து கோரிக்கைகளும் இறுதி ஒப்புதலுக்காக நேரடியாக விண்வெளித் துறைக்கு அனுப்பப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இஸ்ரோவில் இருந்து அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகள் வெளியேறுவது அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வளவு பேர் வெளியேறி உள்ளனர் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவல் எதுவும் இல்லை என்ற போதிலும், சமீப மாதங்களில் மட்டும் 100 முதல் 120 விஞ்ஞானிகள் ராஜினாமா செய்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
100+ விஞ்ஞானிகள்
அதிலும் குறிப்பாக பெங்களூரில் உள்ள யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மையத்தில் இருந்து மட்டும் சுமார் 80 விஞ்ஞானிகளும், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இருந்து 20+ விஞ்ஞானிகளும் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர மேலும் சில ராஜினாமா கோரிக்கைகள் தற்போது பரிசீலனையில் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்தே இந்த அவசர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் ராஜினாமா செய்தவர்களில் பலர் முக்கிய திட்டங்களை வழிநடத்திய மூத்த விஞ்ஞானிகள் ஆவார்.. எல்விஎம்3 ராக்கெட் திட்ட இயக்குநர் விக்டர் ஜோசப், SpaDeX திட்ட இயக்குநர் மற்றும் சந்திரயான்-3 திட்டத்தில் முக்கிய பங்காற்றிய ஆதித்ய ரல்லப்பள்ளி உள்ளிட்டோர் ராஜினாமா செய்துள்ளனர். இதில் ஆதித்ய ரல்லப்பள்ளி சந்திரயான்-3 திட்டத்திற்கு முக்கியமானவர். நிலவில் சாட்டிலைட் இறங்குவதை சோதிக்க 1 லட்சத்திற்கும் அதிகமான சிமுலேஷன்களை நடத்தியவர் தான் இந்த ஆதித்ய ரல்லப்பள்ளி!
சிக்கல் இல்லை
ராஜினாமா அதிகரிப்பது தொடர்பாக பேசிய இஸ்ரோ தலைவர் வி. நாராயணன், "ஆம், சிலர் ராஜினாமா செய்கிறார்கள். அது உண்மை தான். அது எந்த நிறுவனத்திலும் நடக்கும் இயல்பான விஷயம். ஆனால் முக்கிய திட்டங்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒருவர் சென்றால் மற்றொருவர் பொறுப்பேற்பார்கள். அத்தனை திறமையான ஊழியர்கள் எங்களிடம் உள்ளனர்" என்றார்.
இஸ்ரோ தலைவர் இப்படி சொன்னாலும் கூட விண்வெளித் துறையின் உத்தரவே நிலைமையின் தீவிரத்தை எடுத்து காட்டுகிறது. ககன்யான் உள்ளிட்ட தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் பணியாற்றும் விஞ்ஞானிகள் தொடர்ந்து விருப்ப ஓய்வு அல்லது ராஜினாமா கோரிக்கைகளை அளித்து வருவது திட்டங்களின் செயல்பாட்டை கடுமையாக பாதிப்பதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விதிகளில் மாற்றம்
இஸ்ரோவில் 2020ல் சில நிர்வாக மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு இருந்தது. அதில் விஞ்ஞானிகளின் ராஜினாமாவை ஏற்க இஸ்ரோ மைய இயக்குநர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், இப்போது ராஜினாமாக்கள் அதிகரிப்பதால் அந்த நடைமுறை மாற்றப்பட்டு, முக்கிய திட்டங்கள் முடிவடையும் வரை ராஜினாமா கோரிக்கைகளை ஏற்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
14,600க்கும் மேற்பட்ட வேலை செய்யும் இஸ்ரோ இப்போது தொடர் ராஜினாமாக்களால் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது. ராஜினாமா செய்வோரில் பெரும்பாலானோர் அனுபவம் வாய்ந்தவர்கள் என்பதே கவலையை ஏற்படுத்துகிறது. எதிர்காலத்தில் விண்வெளி துறையில் மிக பெரிய திட்டங்களை இந்தியா வைத்திருக்கும் நிலையில், இதுபோல சட்டென பலர் விலகுவது பெரிய சிக்கலை தருவதாகவே இருக்கிறது.















Click it and Unblock the Notifications