வீரப்பன் உருவாக நான் காரணமில்லை.. மூப்பனார்
சென்னை:
வீரப்பன் போன்றவர்கள் உருவாக அரசியல்வாதிகள் காரணம் என்கிறார்கள். நிச்சயம் வீரப்பன் உருவாக நான் காரணமில்லை என்று தமிழ் மாநிலகாங்கிரஸ் தலைவர் மூப்பனார் தெரிவித்தார்.
சென்னையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
வீரப்பனைப் பிடிக்க அவசரப்பட்டு அதிரடிப்படையை அனுப்பத் தேவையில்லை. வீரப்பனின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அரசு முடிவு செய்ய வேண்டும்.
வீரப்பன் திருந்தி வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் எந்த அளவிற்குத் திருந்தி வாழ்கிறார் என்பதை அரசு தான் கண்காணிக்க வேண்டும்.வீரப்பனால் சமுதாயத்துக்கு இடையூறு ஏற்படும் என்று கருதினால் அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீரப்பன் ஒரு நாள் கர்நாடக எல்லையில் இருப்பார். இன்னொரு நாள் தமிழக எல்லையில் இருப்பார். இல்லாவிடில் கேரள எல்லையில் இருப்பார்.எல்லையோரங்களில் இருக்கும் குற்றவாளிகள் தங்கள் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொள்வது வாடிக்கையான விஷயம்தான்.
நெடுமாறன் தனி தமிழ் தேச கொள்கைகள் குறித்துப் பேசி வருகிறார். அது அவரது கருத்து சுதந்திரம். வீரப்பன் போன்றவர்கள் உருவாக அரசு தான்காரணம் என்று ஒரு சாரார் கூறி வருகிறார்கள். நிச்சயமாக, வீரப்பன் உருவாக நான் காரணமில்லை.
தற்போதைய சூழ்நிலையில் தமிழக அரசியல் நிலை மிகவும் குழப்பமாக உள்ளது. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்துக் கூற முடியும். 3 வது அணிஅமைக்க வேண்டும் என்று ஜோதிபாசு கூறியுள்ளார். காங்கிரஸ் இல்லாமல் ஒரு அணி ஏற்பட முடியுமா? அது சரி வராது.
எனக்குப் பதவி வேண்டாம் என்று நான் கூறியுள்ளேன். ஆட்சியில் பங்கு வேண்டாம் என்று நான் ஒரு போதும் கூற மாட்டேன்.
மூப்பனார் தலைமையில் 3 வது அணி அமையும் என்று திருநாவுக்கரசு கூறியிருக்கிறார். அது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. காங்கிரஸ் தலைவர்தேர்தலில், சோனியா காந்தி வெற்றி பெற்றுள்ளார். டெல்லி சென்று அவருக்கு வாழ்த்துக் கூறுவேன் என்றார் மூப்பனார்.