புலி ஆதரவாளர்களைத் தேடுகிறது கர்நாடக போலீஸ்
பெங்களூர்:
விடுதலைப் புலிகள் மற்றும் சமூக விரோத சக்திகளுடன் தொடர்புடையவர்களைத் தேடும் பணியில் கர்நாடக போலீஸார் இறங்கியுள்ளனர்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை கர்நாடக சட்டசபையில் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகையில், கர்நாடக மாநிலத்தில் அமைதி ஏற்படுத்தும் வகையில்,ராஜ்குமார் விஷயத்தில் தவிர்க்க முடியாத சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதாகி விட்டது.
மாநிலத்தில் தேச விரோத சக்திகள் முழுவதுமாக ஒழிக்கப்படும். பெங்களூர் நகரில் உள்ள சமூக விரோத, தேச துரோக, மாபியா கும்பலை ஒடுக்கமாநில அரசு கடமைப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் மற்றும் இது போன்ற கும்பலுடன் தொடர்புடையவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து மாநில அரசு,போலீஸாருக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. இந்த வேட்டையை மாநில போலீஸார் உடனடியாகத் துவங்கியுள்ளனர்.
மாநிலம் முழுவதும் அமைதியை ஏற்படுத்துவதே அரசின் முக்கியக் குறிக்கோளாகும். திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் மாபியா கோஷ்டிகள்வளர்வதை முறியடிக்க ஒரு புதிய சட்டத்தை உள்துறை அமைச்சர் விரைவில் கொண்டு வர உள்ளார் என்றார் கிருஷ்ணா.