ஜீவனாம்சம் கேட்கிறார் ராமர்பிள்ளையின் மனைவி
சென்னை:
மூலிகைப் பெட்ரோல் என்று கூறி கலப்படப் பெட்ரோலை விற்றது தொடர்பாக போலீஸாரால் கைது செய்யப்பட்ட ராமர் பிள்ளையின் மனைவிஅவரிடமிருந்து ஜீவனாம்சம் வாங்காமல் விட மாட்டேன் என்று கூறியுள்ளார்.
இதற்காக இவர் விருதுநகர் மாவட்ட இலவச சட்ட ஆணை பணிக்குழுவிடம் மனு கொடுத்திருக்கிறார்.
மனுவை விசாரித்த நீதிபதி வேணுகோபால் ராமர் பிள்ளை ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். ஆனால் ராமர்பிள்ளை கோர்ட்டில் ஆஜராகவில்லை.
10 ரூபாய் கூட இல்லை:
ஆனால், ராமர்பிள்ளை இதே கோர்ட்டில் வேறொரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சென்னையை விட்டு வெளியேறக் கூடாது என்று சிபிஐ உத்தரவிட்டிருப்பதாலும், சொத்துக்கள் முழுவதும் நீதிமன்ற உத்தரவினால் முடக்கப்பட்டுள்ளது.
நான் இப்போது 10 ரூபாய் கூட இல்லாமல் இருக்கிறேன். எனவே 2 மாதங்கள் கழித்து கோர்ட்டில் ஆஜராகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஜீவனாம்சம்:
இந்நிலையில், ராமர்பிள்ளையின் மனைவி ஜெயந்தி நிருபர்களிடம் கூறுகையில், சென்னையில் வளர்ப்புத்தாயுடன் சந்தோஷமாக இருக்கும் எனது கணவர்கோர்ட்டுக்கு வரவில்லை.
ஆனால் இங்கே நானும் என் குழந்தைகளும் கஷ்டப்படுகிறோம். ஜீவனாம்சம் தரக்கோரி என் கணவர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளேன். எனக்குப்பணம் வரும்வரை விடமாட்டேன் என்று கூறினார்.