தோழமையுடன் வாழ பிஜி பிரதமர் அழைப்பு
சுவா:
பிஜி தீவில் வாழும் பூர்வகுடிமக்களும், இந்தியர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் முன்னேற்றத்தை அடையவும், அமைதியை ஏற்படுத்தவும்முடியும் என்று இடைக்கால பிரதமர் லைசேனியா க்வாரசே வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பிஜித் தீவின் மேற்குப் பகுதியில் உள்ள ஸிகடோகாவில் உள்ள வார்விக் ஹோட்டலில் தேசிய சுற்றுலா உயர்மட்டக் குழுவினரிடம் அவர் கூறியதாவது:
பிஜித் தீவில் கலவரம் நடந்தது நடந்ததுதான். அதற்காக இனிமேல் எதுவும் செய்ய முடியாது. அதே நேரம் பிஜியில் வாழும் இந்தியர்களை அங்கிருந்துவெளியேறச் சொல்வதும், அவர்களை மதிக்காமல் இழிவு படுத்துவம் நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்குப் பேராபத்து விளைவிக்கும்.
பிஜி துண்டாடுப்படுவதை நான் விரும்பவில்லை. ஆப்பிரிக்காவில் நடக்கும் பிரச்சனைகள் போல் பிஜியிலும் பிரச்சனைகள் ஏற்படுவதை ஊக்குவிக்கக்கூடாது. பிஜியில் வாழும் இந்தியர்களும், இங்குள்ள பூர்வகுடி மக்களும் தோழமை உணர்வுடன் இருக்க வேண்டும்.
பிஜியில் கடந்த மே 19 ம் தேதி கலவரம் ஆரம்பித்து அதனால் ஏகப்பட்ட ரகளைகள் ஏற்பட்டன. ஜார்ஜ் ஸ்பைட்டின் ஆதரவாளர்கள் தற்போது தேசவிரோத சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது, தலைநகர் சுவா உள்பட அனைத்துப் பகுதிகளிலும் அமைதி திரும்பி விட்டாலும், இங்குள்ள அரசியல் சக்திகளால் கலவரம் தூண்டி விடக் கூடாதுஎன்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.