ஒரே ஆண்டில் பி.டெக் பட்டம்
பொள்ளாச்சி:
பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியும், கனடா நாட்டில் உள்ள ஒரு கல்லூரியும் புதியஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. இதன்படி இக்கல்லூரியில் 3 ஆண்டு பி. எஸ்சி பட்டம் படிக்கும் மாணவர்,கனடா நாட்டில் ஓராண்டு படித்தால் பி.டெக் பட்டம் பெறலாம்.
இது குறித்து பொள்ளாச்சியில் உள்ள டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி தலைவர் மாணிக்கம் கூறியதாவது:
பொள்ளாச்சியில் உள்ள மகாலிங்கம் கல்லூரியும் கனடா நாட்டில் உள்ள கேம்பிரியன் கலை தொழில்நுட்பக்கல்லூரியும் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.
இந்த ஒப்பந்தப்படி எங்கள் கல்லூரியில் பி.எஸ்சி பயனுறு அறிவியல், தகவல் தொழில்நுட்பம், கம்ப்யூட்டர்சயின்ஸ் ஆகிய படிப்புகளில் 3 ஆண்டுகள் படிப்பவர்கள் அடுத்த ஓராண்டிலேயே பி.டெக் பட்டம் பெறத் தகுதிபடைத்தவர்களாகின்றனர்.
இந்த ஓராண்டு பட்டப்படிப்பை கனடா நாட்டில் உள்ள கேம்பிரியின் கல்லூரியில் படிக்க வேண்டும். இங்கு 3ஆண்டுகள் படித்தபின்பு, அங்குள்ள பி.டெக் நான்காம் பட்டப்படிப்பில் நேரடியாகச் சேர்ந்து படிக்கலாம்.
அவ்வாறு அங்கு படிக்கும் மாணவர்கள், அங்கு வேலை பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும். நான்காம் ஆண்டுபடிக்கும் போது அதற்கான கல்விச் செலவில் இதனைச் சம்பாதித்து விடலாம்.
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள பி.எஸ்சி பாடத்திட்டம், அங்குள்ள பி.டெக் 3ஆண்டு பட்டப் படிப்புடன் ஒத்து வருகிறது. எனவே அவர்கள் நேரடியாக நான்காம் ஆண்டில் படிக்க ஒப்புதல்அளித்துள்ளனர்.
இந்தியாவில் 3 ஆண்டு பி.எஸ் சி பட்டப்படிப்பு முடித்த பிறகு, பி.டெக் படிப்பும் நான்கு ஆண்டுகள் படிக்கவேண்டும் என்றார்.