பா.ஜ.க-சோனியா ஒப்பந்தம்: சுவாமி புதிய குற்றச்சாட்டு
மதுரை:
நாடாளுமன்றத்தைக் கலைத்து விட்டு தேர்தல் நடத்த வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
மதுரையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சுவாமி கூறியதாவது:
தற்போது இருக்கும் நாடாளுமன்றம் ஆட்சி செய்யத் தகுதியற்றது. எனவே இதை கலைத்து விட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர் பதவியை சரியாக பயன் படுத்துவதில்லை. அவர் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் ரகசிய ஒப்பந்தங்கள் செய்துகொண்டுள்ளார்
காங்கிரஸ் கட்சி முக்கிய பிரச்சனைகளான காஷ்மீர் போர் நிறுத்தம், கார்கில் போர், சர்க்கரை இறக்குமதியில் பாகிஸ்தானிடமிருந்து, பிரதமர் லஞ்சம்பெற்றதாக கூறப்படுவது, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை இந்தியாவுக்குக் கொண்டு வருவது, மேலும் கடந்த சில நாட்களாக நாடாளுமன்றநடவடிக்கைகளை பாதித்துவரும் அயோத்தி பிரச்சனை குறித்தெல்லாம் சோனியா பேசுவதில்லை.
பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பெற்று வெற்றி பெறுவதற்காக 2001-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடை பெறும் என ஆர்.எஸ்.எஸ்.கூறியுள்ளது. வாஜ்பாய் ஆர்.எஸ்.எஸ்.சின் கைப்பாவையாக செயல்படுகிறார்.
பாண்டிச்சேரி அமைச்சர் ஜெயக்குமாருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாக கண்ணன் கூறியிருப்பதற்கு தக்க ஆதாரங்கள் இருக்கின்றன. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என கூறினார் சுவாமி.
யு.என்.ஐ.