நெடுமாறனைப் பாராட்டுகிறது பெங்களூர்
பெங்களூர்:
பெங்களூர் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழர் தேசிய இயக்கத் தலைவரும், ராஜ்குமாரை மீட்டு வந்த தூதுக் குழுத் தலைவருமான நெடுமாறனுக்குப் பாராட்டுவிழா நடக்கிறது.
இதுகுறித்து தமிழ்ச்சங்க செயலாளர் ராசு.மாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:
வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரை மீட்டு வந்தது தொடர்பாக நெடுமாறனுக்கு பாராட்டு விழா நடத்த பெங்களூர் தமிழ்ச் சங்கம் முடிவுசெய்துள்ளது.
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டபோது கர்நாடகத்தில் வாழும் சிறுபான்மையினரான தமிழர்களுக்கு பிரச்சனை ஏற்படும் என்ற அச்சம் ஏற்பட்டது.
பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணும் விதத்திலும், ராஜ்குமாரை மீட்பதற்காகவும் நெடுமாறன் மீட்புப் பணியில் ஈடுபட்டார். இதையடுத்து ராஜ்குமாரும்மீட்கப்பட்டார். தமிழர், கன்னடர் உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.
இதையடுத்து, வருகிற 26 ம் தேதி மாலை 5 மணிக்கு பெங்களூர் தமிழ்ச்சங்க திருவள்ளுவர் அரங்கில் பாராட்டு விழா நடக்கிறது. விழாவில் தமிழ்ச்சங்கத்தலைவர் க. சுப்ரமணியம் மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள பல்வேறு தமிழ் அமைப்பினர் கலந்து கொள்கின்றனர் என்று அறிக்கையில் கூறியுள்ளார்.