கோலார் தங்க வயலில் பதற்றம்
கோலார்:
கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் சுரங்கப் பகுதியில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 2தொழிலாளர்கள் பயங்கரமாக தாக்கப்பட்டனர். இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.
நூற்றாண்டு வயதான கோலார் தங்க வயல் விரைவில் மூடப்படவுள்ளது. இதை தொழிலாளர்கள் எதிர்த்துவருகின்றனர். சுரங்கத்தை மூடுவதை எதிர்த்து, கடந்த ஐந்து நாட்களாக தொழிலாளர்கள் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும் ஒரு பிரிவு தொழிலாளர்கள் இதில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், உண்ணாவிரதம் இருந்த வேணு, ரவி ஆகிய இரு தொழிலாளர்கள் புதன்கிழமை கொடூரமாகத்தாக்கப்பட்டனர். எதிர்த்தரப்பு தொழிலாளர்களே அவர்களைத் தாக்கியதாகத் தெரிகிறது.
இதையடுத்து அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை எழுந்தது. தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று திரண்டு,மாவட்ட போலீஸ் எஸ்.பி அலுவலகம் முன்பு குவிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
தாக்குதலில் காயமடைந்த ரவி கோலார் தங்க வயல் மருத்துவமனையிலும், வேணு, பெங்களூர் நிமான்ஸ்மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
போலீஸ் ஐஜி. அச்சுத ராவ் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். கூடுதல் போலீஸ் படையும் அங்குகுவிக்கப்பட்டுள்ளது.
சுரங்க ஊழியர்கள் தாக்கப்பட்டதையடுத்து, தங்க வயல் பகுதி முழுவதிலும் வர்த்தக நிலையங்கள், தியேட்டர்கள்,வங்கிகள், கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு பந்த் அனுசரிக்கப்பட்டது.
கோலார் தங்க வயல் ஊழியர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.