கூலிங்கிளாஸ் அணிந்த குறுந்தொகையே!
சென்னை:
சென்னையில் நடந்த திரு.வி.க, பாரதியார், பாரதிதாசன், தந்தை பெரியார் விருது வழங்கும் விழாவில் கவிஞர் வாலி முதல்வர் கருணாநிதி குறித்து கவிதைபாடினார்.
வாலியின் வரிகளை நாமும் சுவைக்கலாமே ...
இதோ கவிதை ..
நான்
காதலாகி
கசிந்து கண்ணீர் மல்கி
கைகூப்பித் தொழும் தமிழ்க்
கடவுளெனக் கண்முன் எழும்....
மாண்புக்கெல்லாம் மாண்பான
மாண்பமைந்த முதல்வா!
அற்றை நாளில் - ஓர்
ஆண்மகவு வேண்டுமென்று
பெற்றோர் நோன்பிருந்து
பெற்றெடுத்த புதல்வா!
நூற்கடல் முத்துவேலர் - ஒரு
நொடிக்கு நொடி நேசித்த
பாற்கடல் அஞ்சுத்தன்னை
பயந்த நல் அமுதமே!
மடமையில் உறங்கும்- இந்த
மண் விழிக்க வேண்டி- ஒரு
கற்பரசி மடிக்குளத்தில்
கண்விழித்த குமுதமே!
சிறு
மகவு அனையதொரு
மனம் படைத்தோய்! உன்
தகவு அடங்குமோ - என்
தமிழுக்குள்? பசிபிக்
சமுத்திரம் அடங்குமோ - சின்ன
சிமிழுக்குள்?
என்னிடத்தில்
ஏது- உன்
சீர்த்தியைச் சுட்ட - ஒரு
சொற்குறி?
உன் விஷயத்தில்
தலைவா! நானொரு
தற்குறி
உதய சூரியன்
கறுப்பு சிவப்பு
கரை கொண்ட வேட்டியை
உடுத்தி நடக்கும்
உதய சூரியனே!
முரசொலியில் நீ வரையும்
மடல் படித்து - உன்னுள்
இடம்பிடிக்கும் உடன் பிறப்புக்களின்
இதய சூரியனே!
ஞான
ஞாயிறே!
உனக்கு உண்டு சுத்த மனம்:
உனக்கு உண்டு ஒத்த மனம்:
உனக்கு இல்லையே அத்தமனம்!
பேசரிய பீடுடைய
பெருந்தகையே!
கூலிங்கிளாஸ் அணிந்த
குறுந்தொகையே!
அணுவளவும் குறையாது- உன்
ஆரோக்கியம்! முன்னம்
அரசாண்டவர்களில் - உன்னைவிட
ஆர் யோக்கியம்?
சிலர்
வாழ்ந்த வாழ்வை - அவர்களது
வண்டவாளம் சொல்லும்: உன்
தியாக வாழ்வை - கல்லக்குடி
தண்டவாளம் சொல்லும்!
நிச்சயம் - நீ
நூறாண்டு வாழ்வாய்!
ஆம்!
அது...
தீர்க்கசுமங்கலியாம்
தயாளு அம்மாளின்
தாலி பாக்கியம்: அதுவே இந்த
வாலி பாக்கியம்!