சிங்கப்பூரில் 5 இந்தியர்கள் கைது
சிங்கப்பூர்:
மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் செல்லும் டேங்கர் லாரியில் மறைந்திருந்த 5 இந்தியர்களை சிங்கப்பூர் போலீஸார் கைது செய்தனர்.
குடியேற்றத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் இவர்கள் வந்த டேங்கர் லாரியை நிறுத்தி சோதனை செய்து இவர்களைக் கைது செய்தனர். கைதுசெய்யப்பட்ட ஐந்து இந்தியர்களும் 21 முதல் 37 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்கள் 2 வாரங்களுக்கு முன் முறையாக மலேசியாவுக்குச் சென்றனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து இந்தியர்களும், இந்தியாவில் விவசாய வேலை செய்து வந்ததாகவும், தங்களிடம் இருப்பவற்றையெல்லாம் விற்றுவிட்டு,கொஞ்சம் கடன் வாங்கிக்கொண்டு சிங்கப்பூருக்கு வர முயன்றதாகவும் தெரிவித்தனர்.
சிங்கப்பூரைச் சேர்ந்த ஏஜன்ட் ஒருவர் இவர்களுக்கு சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாக உறுதி அளித்ததையடுத்து இவர்கள் அவருக்குப் பணம் கொடுத்துசிங்கப்பூர் வர முயன்றனர். ஏஜன்ட்டுக்கு ஒவ்வொருவரும் 1,764 அமெரிக்க டாலர்கள் கொடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கனரக வாகனங்களில் வரும் மக்களை ஏமாற்றி அவர்களை சிங்கப்பூருக்கு அழைத்து வருவதாகக் கூறி, பணம் பறிக்கும் முயற்சியில் பல ஏஜன்டுகள்ஈடுபடுகின்றனர் என்றும் குடியேற்றத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.