கூட்டுறவு ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு
சென்னை:
தமிழகத்தில் கூட்டுறவு ஊழியர்களுக்கு சம்பளம் விரைவில் உயர்வு அளிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அன்பழகன் சனிக்கிழமை தெரிவித்தார்.
சென்னையில் சனிக்கிழமை 47 வது கூட்டுறவு வாரவிழா தொடங்கியது. உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் நேரு தலைமையில் நடந்தவிழாவில் கல்வி அமைச்சர் அன்பழகன் கலந்து கொண்டு விழாவைத் தொடங்கி வைத்துப் பேசினார்.
அவர் பேசியதாவது:
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கூட்டுறவு அமைப்பு முதன்முதலாக கடந்த 1927ம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது அமைச்சராக இருந்தபி.டி.ராஜன் இந்த துறைக்கு அடித்தளம் அமைத்தவர்.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொய்வாக இருந்த இந்தத்துறை, இப்போது அபார வளர்ச்சி அடைந்துள்ளது. கூட்டுறவு ஊழியர்களுக்கு விரைவில் சம்பளஉயர்வு அளிக்கப்படும் என்று அமைச்சர் நேரு கூறியுள்ளார். அது விரைவில் அமுல்படுத்தப்படும் என்றார் அன்பழகன்.