கண்ணீர் கடலில் பகுஜ்
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் உள்ள பகுஜ் மாவட்டத்தில் மட்டும் பூகம்பத்தால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20, 000 ஐ தாண்டும் என்று தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
ஞாயிற்றுக்கிழமை காலை மருத்துவர்கள் குழு ஒன்று பகுஜ் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டது. அவர்கள் தெரிவித்ததுபடி, இடிபாடுகளுக்கிடையில் 50,000பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் இன்னும் முழுமையாக மீட்கப்படவில்லை என்று தெரிகிறது.
பகுஜ் மாவட்டத்தில் மட்டும் சாவு எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டும் என்று தெரிகிறது. பகுஜ் மாவட்டம் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாகிஅழிந்தது போல் முழுவதுமாக அழிந்து விட்டது. பகுஜ் மாவட்டத்தில் பாதிக்கப்படாத பகுதி ஒன்று கூட இல்லை.
பகுஜ் மாவட்டத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் 24 மணிநேரமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. டாக்டர்கள் அனைவரும்உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் காயமடைந்த நிலையில் வரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ராம் மனோகர் மருத்துவமனை, அகில இந்திய மருத்துவக்கழக மருத்துவமனைகளில் சடலங்கள் வந்த வண்ணம் உள்ளன. இரண்டு மருத்துவமனைகளிலிருந்தும் டாக்டர்கள் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றுள்ளன. அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செஞ்சிலுவை சங்கத்தின் உதவியுடன்காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்றார்.
யு.என்.ஐ.