சிங்கப்பூரில் தாத்தா, பாட்டிகள் அதிகரிப்பு
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் வீட்டிலிருக்கும் நபர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அந்நாட்டு புள்ளிவிவரத்துறை அறிக்கை தெரிவிக்கிறது.
1980 களில் ஒரு வீட்டிற்கு 4.9 பேர் என்ற அளவில் குடியிருந்தனர். 90-களில் இது வீட்டிற்கு 4.2 பேர் எனக் குறைந்து தற்போது வீட்டிற்கு 3.7 பேர்என்ற நிலையில் வசிக்கின்றனர். இதற்கு காரணம் பிறப்பு விகிதம் குறைவு மற்றும் வீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவையாகும் என ஸ்ட்ரைட்டைம்ஸ் பத்திரிக்கை தெரிவிக்கிறது.
கடந்த பத்தாண்டுகளில் மட்டும் 2,60,000 வீடுகள் புதிதாக கட்டப்பட்டுள்ளதாக அரசின் புள்ளிவிவர அறிக்கை தெரிவிக்கிறது.
ஒருவர் மட்டுமே வசிக்கும் வீடுகள் 5.2 சதவீதத்திலிருந்து 8.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. சீனர் மற்றும் இந்தியர்கள் வசிக்கும் வீடுகளில் பாதி, 4நபருக்கும் குறைவான நபர்களைக் கொண்டவையாகும். மலாய் மக்களின் வீடுகளில் மூன்றில் ஒரு பங்கு வீடுகள் 4 நபருக்கும் குறைவானவர்களைக்கொண்டுள்ளது.
வயதானவர்களைக் கொண்ட வீடுகளின் எண்ணிக்கை 20.7 சதத்திலிருந்து 21.4 சதமாக உயர்ந்துள்ளது. வயதானவர்கள் மட்டுமே உள்ள வீடுகளின்எண்ணிக்கை 10,400லிருந்து 25,700 ஆக உயர்ந்துள்ளது.