உலகநாடுகளின் உதவிக்கரம்
காந்திநகர்:
பூகம்பத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களுக்கு உலக நாடுகளின் நிதியுதவிகள்,நிவாரணப் பொருட்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
வரலாற்றைப் புரட்டிப் போட்ட குஜராத் பூகம்பம் உலக நாடுகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்தியாவின் வெளிப்படையான எதிரி என்றுவர்ணிக்கப்பட்ட பாகிஸ்தான் உள்பட பல நாடுகளிலிருந்தும் நிதியுதவி தவிர பிற உதவிகளும் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, ஓமன், குவைத், ரஷ்யா, துருக்கி மற்றும் பல சர்வதேச சமூக நல அமைப்புக்கள் போட்டி போட்டுக்கொண்டு நிதியுதவி செய்த வண்ணம் உள்ளன. வெளிநாடுகளிலிருந்து வந்த மீட்புக் குழுவினர் கடந்த 10 நாட்களாக குஜராத்தில் முகாமிட்டு மீட்புப் பணிகளைமேற்கொண்டு வருகின்றனர்.
குஜராத்தில் சமீபத்திய வருடங்களில் வறட்சி மற்றும் புயல் ஏற்பட்டது. அப்போதும் இதேபோல் உலக நாடுகள் உதவி செய்தன. அதே போல்இப்போது பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்துக்கு உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
அகமதாபாத் விமான நிலையத்துக்கு வந்திறங்கும் மீட்புக்குழுவினரை அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் முறையாக பூகம்பத்தால் பாதிக்கப்பட்டபகுதிகளுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அகமதாபாத் விமான நிலையத்தில் குஜராத் பூகம்ப நிவாரண ஒருங்கிணைப்பு கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.அந்தக் கமிட்டியிலுள்ள உறுப்பினர்கள் நிவாரணப் பொருட்களை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
குஜராத், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடமும் நிதியுதவி கேட்டுள்ளது. அவர்கள் நேரடியாகவும், கடன் மூலமும் நிதியுதவி செய்வதாக உறுதிஅளித்துள்ளனர். ஏறத்தாழ 22 க்கும் மேற்பட்ட நாடுகள் டாக்டர்கள், மருந்துகள், கனரக இயந்திரங்கள், உணவுப்பொருட்கள், கூடாரங்கள்அமைக்கத் தேவையான பொருட்கள், கம்பளிகள் ஆகியவற்றை அனுப்பியுள்ளன.
இதுதவிர, இஸ்ரேல் மற்றும் செஞ்சிலுவைச் சங்கங்கள் நடமாடும் மருத்துவமனைகளை அமைத்து பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்துவருகின்றன. அவர்கள், இதுவரை பூஜ் பகுதியில் காயமடைந்த 100 க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். தென்கொரியாவிலிருந்துமருத்துவக்குழுவினர் அகமதாபாத் வந்து பல வகைகளில் உதவி செய்து வருகின்றனர். இவர்கள் அஞ்சார் நகரில் முகாமிட்டுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.