பொருட்களுடன் வந்தார் ஜஸ்வந்த்
துபாய்:
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஐக்கிய அரபு நாடுகளிலிருந்து 3.5 டன் நிவாரணப் பொருட்களை வாங்கிக் கொண்டுஇந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் சிறப்பு விமானம் மூலம் இந்தியா திரும்பினார்.
இந்திய - எகிப்து கூட்டு ஆணையத்தின் சார்பில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், இந்தியா திரும்பும்வழியில் துபாயில் இறங்கினார். அப்போது அங்குள்ள, இந்திய மக்கள் பலரை சந்தித்துப் பேசினார்.
அபுதாபியிலுள்ள இந்திய சமூக அமைப்பின் அதிகாரிகள், குஜராத் பூகம்ப நிவாரண நிதியாக ரூ 2 லட்சத்திற்கான காசோலையை இந்திய வெளியுறவுத்துறைஅமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் கொடுத்தனர். அவர்கள் ரூ 5 லட்சம் வசூல் செய்து கொடுப்பதாகவும் ஜஸ்வந்த் சிங்கிடம் கூறினர்.
ஐக்கிய அரபு நாடுகளில் வசிக்கும் இந்திய மக்கள், குஜராத்துக்காக நிதியுதவி அளித்தது குறித்து தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், குஜராத்தில்பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களை தத்தெடுத்துக் கொள்வதாகவும் கூறியதை அவர் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
ஐக்கிய அரபு நாடுகள் ஏற்கனவே, குஜராத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கூடாரங்கள் அமைப்பதற்காக சிறப்பு விமானத்தில் 40டன் பொருட்களை அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.