216 பேர் உயிரோடு மீட்பு
டெல்லி:
குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் கட்டிட இடிபாடுகளுக்கிடையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த 216 பேரையும், இறந்து கிடந்த 526பேரின் சடலங்களையும் மத்திய ரிசர்வ் போலீஸ் மற்றும் அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர்.
இதுதவிர, மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணிபுரியும் டாக்டர்கள், 3171 க்கும் மேற்பட்ட காயமடைந்த மக்களுக்கு சிகிச்சையளித்து வருகிறார்கள்.அவர்கள், பூகம்பத்தால் காயமடைந்தவர்களுக்காக ரூ 4 லட்சம் பெறுமானமுள்ள மருந்துப் பொருட்களைக் கொண்டு சென்றுள்ளார்கள்.
ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 27, 035 பேருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கியுள்ளனர். மேலும் ஒரு நாளைக்கு 20 முறை லாரிகள் மூலம் குடிநீர்விநியோகமும் செய்து வருகின்றனர்.
இவர்கள், பச்சாவ் தாலுக்காவில் உள்ள வூன்டா மற்றும் அன்தோய் ஆகிய இரண்டு கிராமங்களைத் தத்தெடுத்துள்ளனர். இதுதவிர பூகம்பத்தால்பாதிக்கப்பட்டு காயமடைந்த மக்கள் வசிக்கும் இடங்களில் கொள்ளைக்காரர்கள் யாரும் பிரச்சனை செய்யாதவாறு ரிசர்வ் போலீஸ் படையினர் 24மணிநேரமும் காவல் காத்து வருகிறார்கள்.
யு.என்.ஐ.