சண்டை நிறுத்தத்திற்கு ஆதரவு தருவோம் .. பரூக் அப்துல்லா
டெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அடுத்த ஒரு மாதத்திற்கு சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பதற்கு தான் முழுவதும் ஆதரவு தருவதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் பரூக்அப்துல்லா சனிக்கிழமை தெரிவித்தார்.
காஷ்மீரில் சண்டைநிறுத்தத்தை நீட்டிப்பது குறித்து நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் கூறுகையில், காஷ்மீரில் அமைதிஏற்படுத்துவதற்கான முயற்சி சண்டை நிறுத்தம் மட்டுமேயாகும். தீவிரவாதிகள் சண்டை நிறுத்தத்திற்கு ஆதரவு தர வேண்டும்.
தினம், தினம் அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு சண்டை நிறுத்தம் மட்டுமே கைகொடுக்காது.தீவிரவாதிகளும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். சண்டை நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் தீவிரவாதம் குறைந்திருக்கிறது என்றே கூறலாம்.சண்டை நிறுத்தத்தை அடுத்த ஒரு மாதத்திற்கு நீட்டிக்க நான் முழு ஆதரவு தருவேன் என்றார்.
முன்னதாக, வன்முறை வெடிப்பதை தடுப்பதற்காக ஸ்ரீநகர் முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைநடவடிக்கையால் வியாழனன்று சோப்பூர் பகுதியில் 5 முஸ்லீம்கள் இறந்து விட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றபோராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் செய்த முயற்சி பலிக்கவில்லை.
எனவே, கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஜாவேத் அஹமது என்ற இளைஞன் இறந்துவிட்டார். இச்செய்தி அறிந்ததும்மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடும் என்று கருதி ஸ்ரீநகர் முழுவதும் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர், சோப்பூர், பதான், பாரமுல்லா, மற்றும் குப்வாரா பகுதிகளுக்கு கூடுதல் பாதுகாப்பு படைகள் அனுப்பப்பட்டுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications