மாறனின் கூட்டாளி கிருஷ்ணமூர்த்தி கைது
கோவை:
வீரப்பனின் வலது கரமாக விளங்கிய மாறனின் கூட்டாளியான கிருஷ்ணமூர்த்தியைப் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். இவரை கோவையில் உள்ள ஒருரகசிய இடத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீரப்பனின் கூட்டாளியான மாறனைப் போலீசார் சிறுவாணி மலைப் பகுதியில் கைது செய்ததாகத் தெரிவித்தனர். மாறனின்கைது குறித்து இன்னும் மர்மம் நீடித்து வருகிறது. அதேசமயம், மாறனின் முக்கியக் கூட்டாளிகள் சிலரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தக் கூட்டாளில்., தமிழர் மீட்புப் படை என்ற பெயரில் ஒரு இயக்கத்தை ஆரம்பித்து நடத்தி வந்த கிருஷ்ணமூர்த்தியைப் போலீசார் சுற்றி வளைத்துப்பிடித்தனர். இவரைக் கடலூர் அருகே பிடித்தாலும், கோவைக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழர் விடுதலைப் படை என்ற பெயரில் மாறன் இயக்கம் நடத்தி வந்தாலும், இந்த இயக்கத்தில் கூட்டாளியாக இருந்து வந்த கிருஷ்ணமூர்த்தி தமிழர்மீட்பு படை என்ற படையைச் சேர்ந்தவர் எனக் கூறப்படுகிறது.
கிருஷ்ணமூர்த்தியின் சொந்த ஊர் பழனி அருகே உள்ள புஷ்பத்தூர். இவர் கடந்த 91ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட அலுவலகத்தில் கை குண்டு வீசியுள்ளார்.இது தொடர்பாகவும் போலீசார் இவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், இவரை கடலூரில் போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்துள்ளனர்.