கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை .. பாண்டி காங்.
பாண்டிச்சேரி:
வரும் சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது குறித்து நாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என்று பாண்டிச்சேரி காங்கிரஸ்தலைவர் வி.நாராயணசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து பாமக விலகி, அதிமுக வில் சேர்ந்து விட்டதால் காங்கிரஸ் கட்சியும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் யாருடன் கூட்டணிவைத்துக் கொள்வது என்ற குழப்பத்தில் உள்ளன.
மேலும் விடுதலைப் புலிகள் ஆதரவுக் கட்சியான பாமக, அதிமுக வுடன் கூட்டணியில் சேர்ந்து விட்டதால் தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி அரசியலில்பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பாண்டிச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பாண்டிச்சேரியில் காங்கிரஸ் மிகவும் வலுவான கட்சி. திராவிடகட்சிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு பலமுறை காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி அதிமுக வுடன் கூட்டணி வைத்துக் கொள்வது குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியின் தூதர்கள் பிரணாப்முகர்ஜியும், குலாம் நபி ஆசாத்தும் திங்கள்கிழமை ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார்கள்.
அவர்கள் பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தவும், அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவாரியான வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுவதற்குமான அனைத்து முயற்சிகளையும் மேற் கொள்வார்கள் என்றார் நாராயணசாமி.
யு.என்.ஐ.