ஆப்கன் புத்தர் சிலைகள் தற்காலிகமாக தப்பின
துபாய்:
பக்ரீத் பண்டிகையையொட்டி புத்தர் சிலை உடைப்பை ஒத்தி வைத்திருப்பதாக ஆப்கானின் பழமைவாத தலிபான் அரசுகூறியுள்ளது.
முன்னதாக அந் நாட்டில் பாமியான் பகுதியில் உள்ள 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இரு புத்தர் சிலைகளின் தலைப்பகுதியும் கால்களும் டாங்கிகள் மற்றும் குண்டுகளை வைத்துத் தகர்க்கப்பட்டதாக செய்திகள் வந்தன.
இந் நிலையில் அந் நாட்டின் செய்தித் தொடர்புத்துறை அமைச்சர் மெளல்வி குத்ரதுல்லா ஜமால் கூறுகையில், இந்த சிலைகள்இன்னும் உடைக்கப்படவில்லை. ஆனால், அவை நிச்சயம் உடைக்கப்படும். ஈத்-உல்-அல்கா (பக்ரீத்) பண்டிகைக்காக இந்தநடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், நாட்டில் இருந்த பிற சிலைகள் அனைத்தும் உடைக்கப்பட்டுவிட்டன.
சிலைகளை வணங்குவது இஸ்லாமுக்கு முரணானது. சிலைகளை உடைக்க எங்கள் அமீர் (தலைவர்) உத்தரவிட்டுவிட்டால் அதையாரும் தடுக்க முடியாது. பாமியானில் உள்ள புத்தர் சிலைகளை உடைக்கும் பணிபிப்ரவரி 27ம் தேதி தொடங்கியது.
எங்கள் ஆட்சியை 3 நாடுகள் தான் அங்கீகரித்துள்ளது. இதுவரை இந்த சிலை உடைப்புக்கு பிற நாடுகளிடமிருந்துஅதிகாரப்பூர்வமான எதிர்ப்பும் வரவில்லை.
எல்லா நாடுகளாலும் ஒதுக்கப்பட்டுவிட்ட தலிபான் அரசு உலக அரங்கில் தனது எதிர்ப்பைக் காட்டவும், தங்களதுமுக்கியத்துவத்தை உணர்த்தவும் தான் இந்த முட்டாள்தனமான செயலில் இறங்கியுள்ளது.
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனை ஒப்படைக்காதவரை அந்த நாட்டின் மீதான தடைகள் தொடரும் என ஐக்கிய நாடுகள்சபையும் தெரிவித்துவிட்டது.
ஆப்கானிஸ்தானை 1996ம் ஆண்டில் கைப்பற்றிய இந்த பழமைவாதக் கும்பல் அந்த நாட்டை பல நூற்றாண்டுகள் பின்னால்இழுத்துச் சென்றுவிட்டது. பெண்களின் சுதந்திரம், கல்வியறிவு பறிக்கப்பட்டுவிட்டது.
மதத்தின் பெயரால் பொது இடத்தில் கொலைகள் அதிகரித்து வருகிறது. பொது மக்கள் பசியிலும் பட்டினியிலும் தவித்துவருகின்றனர். பெரும் வறட்சியில் நாடே திண்டாடி வருகிறது. நாட்டின் சிரமங்களைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்கமுடியாத இந்த தலிபான் அரசு தன்னை அரசியல்ரீதியில் நிலை நிறுத்திக் கொள்ளவும், மத உணர்வு மூலம் மக்களின் ஆதரவைப்பெறவும் முயன்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாகவே சிலைகளை உடைக்கும் செயலில் ஆப்கன் அரசு இறங்கியுள்ளது.
இந்த தலிபான் ஸ்டைல் இஸ்லாமை பல இஸ்லாமிய நாடுகளே ஒதுக்கித்தள்ளி விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. தலிபானின்இந்த செயல் இஸ்லாமிய மதத்துக்கு எதிரானது என பல நாடுகளும் இஸ்லாமிய அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.