3 வது அணி உருவாக புதிய நீதிக்கட்சி அழைப்பு
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைக்க வேண்டும் என்று புதிய நீதிக் கட்சி பொதுக்குழுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
புதிய நீதிக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை கூடி சட்டசபைத் தேர்தல் குறித்து விவாதித்தது.
கூட்டம் முடிந்த பின் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
தமிழகத்தில் 3 வது அணி அமைக்கப்பட வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். 3 வது அணிக்கு மூப்பனார் தலைமை தாங்க வேண்டும் என்று அவரிடம்வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
தமிழகத்தில் திமுக கூட்டணிக்கும், அதிமுக கூட்டணிக்கும் புதிய நீதிக்கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது. பல கட்சிகளில் பிளவு ஏற்பட்டுள்ள இந்த நேரத்தில் 3வது அணி அமைவதுதான் சிறந்தது. 3 வது அணி அமைந்தால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்புக்கள் பிரகாசமாக இருக்கும்.
3 வது அணி அமைக்கப்பட்டால் ஆட்சியில் அனைத்துக் கட்சிகளுக்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
இருப்பினும் மூப்பனார் 3 வது அணி அமைவது குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும். இடது சாரி கட்சிகள் அதிமுக விலிருந்து பிரிந்து 3 வது அணி அமையஉதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு ஏ.சி.சண்முகம் நிருபர்களிடம் கூறினார்.
யு.என்.ஐ.