தூர்தர்ஷனை அரசு தவறாக பயன்படுத்துகிறது: காங்.குற்றச்சாட்டு
டெல்லி:
அரசின் தகவல் ஒளிபரப்பு சாதனங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது.
ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் இவற்றை பயன்படுத்தியதன் மூலம் தவறான முன் உதாரணம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது என பிரதமர்வாஜ்பாய்க்கு எழுதிய கடிதம் ஒன்றில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்து உள்ளார்.
கடந்த வாரம் வெளியான ஆயுத பேர ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தனது பதவி விலகலைதூர்தர்ஷன் மூலம் அறிவித்தார்.
மார்ச 15ம் தேதி அரசுக்கு சொந்தமான தூர்தர்ஷனில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக தனது தரப்பு வாதங்களை எடுத்து கூறிய பெர்னாண்டஸ் தனதுபதவி விலகலையும் அப்போது அறிவித்தார்.
அது போல், பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றும் பிரதமரின் முதன்மை பாதுகாப்பு ஆலோசகர் பிரஜேஷ் மிஸ்ராவும், தனி அதிகாரி என்.கே.சிங்கும்தங்களது விளக்கங்களை தூர்தர்ஷன் மூலம் தெரிவித்தனர்.
இவற்றை குறிப்பிட்டு பிரதமருக்கு கடிதம் எழுதிய சோனியா காந்தி, தவறான முன் உதாரணங்கள் இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டு உளளது.
ஊழல் குறித்து தங்களது கருத்துகளை மக்களிடம் எடுத்து கூற அனைத்து எதிர்க் கட்சிகளுக்கும் தூர்தர்ஷனில் நேரம் ஒதுக்க வாஜ்பாய் அரசு முன்வரவேண்டும் என கோரி உள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.