500 விக்கெட்டுகளை வீழ்த்தி வால்ஷ் உலக சாதனை
போர்ட் ஆப் ஸ்பெயின்:
டெஸ்ட் கிரிக்கெட்டில் 500வது விக்கெட்டை எடுத்ததின் மூலம் டெஸ்ட் உலகில் சாதனை படைத்துள்ளார் மேற்கு இந்திய தீவுகள் அணியின் வேகப்பந்துவீச்சாளர் கர்ட்னி வால்ஷ்.
திங்கள் கிழமை குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இச்சாதனையை நிகழ்த்தினார்.
இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா வீரர் கபில் தேவ் மற்றும் நியூஸிலாந்து வீரர் சர்.ரிச்சர்ட் ஹாட்லி ஆகிய இருவர் மட்டுமே 400விக்கெட்டுகளை கடந்து இருந்தனர்.
அவர்களின் சாதனையை முறியடித்த வால்ஷ் 500விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்று உள்ளார்.
வால்ஷின் திறமைக்கும் உழைப்பிற்கும் கிடைத்த பரிசு இது. இச்சாதனைக்காக ஜமைக்கா மக்களின் சார்பாக வாழ்த்துகளை தெரிவிப்பதாக ஜமைக்காபிரதமர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
வால்ஷின் இந்தி சாதனை கால்பந்தில் 1000 கோல்கள் அடித்த பிரேஸில் கால்பந்து வீரர் பீலேயின் சாதனையுடன் ஒப்பிடப்படுகிறது.
மேற்கு இந்திய தீவுகள் அணியின் முக்கிய பந்து வீச்சாளரான வால்ஷ் 1984 முதல் டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறார்.
வால்ஷின் முதல் விக்கெட் ஆஸ்திரேலிய அணியின் கிரேமி வுட். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 435வது விக்கெட்டை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளைவீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் வால்ஷ்.
தனது 500வது விக்கெட்டாக திங்கள் கிழமை தென்னாப்பிரிக்க வீரர் ஜாக் காலிஸின் விக்கெட்டை வீழ்த்தினார். தனது டெஸ்ட் கிரிக்கெட்வரலாற்றில் 21 முறை ஒரே இன்னிங்ஸில் 5விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் வால்ஷ்.
சிறந்த பந்து வீச்சாளர் மற்றும் மோசமான பேட்ஸ்மேன் என்ற சிறப்புகளை ஒரே சமயத்தில் பெற்று இருப்பவர் வால்ஷ் ஒருவர் மட்டுமே.
திங்கள் கிழமை அன்று மே.இ.தீவுகளின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தின் போது ஆடிய வால்ஷ் 42வது முறையாக ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட்ஆனார்.
இவர் அவுட் ஆனதோடு ரிட்லி ஜேகப்ஸ் முதல் டெஸ்ட் சதம் எடுக்க முடியாமல் செய்து விட்டார். காரணம் வால்ஷ் கடைசி வீரராக அவுட் ஆனதால்ஜேகப்ஸ் 97 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ் மேனாக பெவிலியன் திரும்பினார்.