ஆஸி.யின் கனவு தகர்ந்தது: தொடரை இந்தியா வென்றது
சென்னை:
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பெப்ஸி கோப்பை டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. இதன் மூலம் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லவேண்டும் என்ற ஆஸி.அணியின் கனவு தகர்ந்தது.
சென்னையில் நடைபெற்ற ஆஸி. அணிக்கு எதிரான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியின் இறுதி நாளான வியாழக்கிழமை இந்தியா 2விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
தொடர்ந்து 15 டெஸ்ட் போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலிய அணி கடந்த மாதம் இந்திய சுற்றுப்பயணத்தை தொடங்கியது. இந்தியாவிற்கு கிளம்புவதற்குமுன்பே இந்திய வீரர்களுக்கு கலக்கத்தை உண்டு பண்ணினார் ஸ்டீவ் வாஹ்.
குறிப்பாக இந்திய அணித் தலைவர் செளரவ் கங்குலியை குற்றம் சாட்டினார் வாஹ். இந்திய அணிக்கு ஏற்ற வகையில் மைதானங்களை மாற்றி அமைக்ககிரிக்கெட் அதிகாரிகள், இந்திய கேப்டன் ஆகியோர் முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார்.
அதனை கங்குலி மறுத்தார். தொடர்ந்து இரண்டு அணியின் கேப்டன்களுக்கும் இடையில் ஒரு அறிக்கைப் போர் நடைபெற்றது. பின்னர் இந்தியா வந்த ஆஸி.அணி மும்பையில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை வென்றது.
இதன் மூலம் தொடர்ந்து 16வது போட்டியில் வென்று சாதனை நிகழ்த்தியது. ஆஸி. அணி ஆஸ்திரேலியாவில் மட்டுமே தொடர்ந்து வெற்றி பெறுகிறதுஎன்ற குற்றச்சாட்டை பொய்யாக்கவும் மும்பை டெஸ்ட் ஆஸி.அணிக்கு உதவியது.
இப்போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான கங்குலி, திராவிட் போனறவர்கள் தங்களது திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்த வில்லை.தோள்பட்டை வலி காரணமாக சிகிச்சை பெற்று வந்ததால் இந்திய சுழல்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே இத்தொடரில் இடம் பெறவில்லை.
கடந்த 98ம் ஆண்டு ஆஸி. அணி இந்தியா வந்த போது இந்தியாவின் வெற்றிக்கு காரணமாக இருந்தவர் கும்ப்ளே என்பது குறிப்பிடத்தக்கது.கோல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டியில்தான் திருப்பமே ஏற்பட்டது.
முதலில் ஆடிய ஆஸி. அணியின் 445 ரன்கள் என்ற ஸ்கோரில் பாதி கூட எடுக்காத இந்தியா பாலோ ஆன் பெற்றது. தொடர்ந்து ஆடிய 2வது இன்னிங்ஸில்வி.வி.எஸ்.லட்சுமணன் இரட்டை சதம் அடித்ததோடு திராவிட்டும் சதம் அடித்தார்.
அப்போட்டியில் 364 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என ஆடிய ஆஸி. அணி இந்தியாவின் சுழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கின் சிறப்பான பந்துவீச்சில் சுருண்டது. 226 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் ஆஸி.அணி இழந்ததால் அப்போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
ஆஸி. அணி கடந்த 2 ஆண்டுகளில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியது. சென்னையில் நடைபெற்ற 3வது மற்றும் இறுதி டெஸ்ட்போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானதாக இருந்தது.
22 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற கனவோடு வந்தது ஆஸி. அணி. மும்பை போட்டியில் வென்றுஉள்ளதால், சென்னை போட்டியை வென்றால் அந்த கனவு நிறைவேறும் என காத்து இருந்தது.
ஆனால், இந்திய அணி இப்போட்டியில் வெல்வதன் மூலம் ஆஸி. அணியிடம் 99ம் ஆண்டு பெற்ற தோல்விக்கு பதில் சொல்லியது போல் இருக்கும் என்றநிலை. சென்னை போட்டியில் டாஸ் வென்ற ஆஸி. அணி முதலில் பேட்டிங்கை தேர்ந்து எடுத்தது.
391 ரன்களுக்கு தனது முதல் இன்னிங்ஸை இழந்தது அந்த அணி. அந்த அணிக்கு சவாலாக விளங்கிய ஹர்பஜன் 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 326ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இருந்த அந்த அணி அடுத்த 65 ரன்களுக்கு மீதி இருந்த 7 விக்கெட்டுகளை இழந்தது.
ஆஸி.வீரர்கள் சுழல்பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாது என்பதை நிரூபிப்பதை போல் இருந்தது. பின்னர் ஆடிய இந்திய அணி, சச்சினின் சதம், தாஸ் மற்றும்திராவிட் ஆகியோரின் உதவியால் 501 ரன்களை குவித்தது.
பின்னர் 2வது இன்னிங்ஸை தொடர்ந்து ஆடிய ஆஸி. அணி 2வது இன்னிங்ஸில் 264 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. ஆட்டத்தின் கடைசி நாளான வியாழக்கிழமைநடந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.
155 ரன்கள் எடுத்தால் இந்தியா இப்போட்டியில் வெல்லும் என்ற நிலை. 101 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இருந்த இந்தியா அடுத்த 34ரன்களுக்கு மேலும் 5 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் ஒரு கட்டத்தில் ஆஸி. அணி வெற்றி பெறும் நிலை இருந்தது. தட்டுத் தடுமாறி ஆடிய இந்திய அணியில் சமீர் திகே தொடர்ந்து 2 பவுண்டரிகள்அடித்தார். பின்னர் மெக்ராத்தின் ஓவரில் வெற்றி ரன்களை அடித்தவர் ஹர்பஜன்சிங்.
இப்போட்டியில் வென்றதன் மூலம் 3 போட்டிகளை கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்று பெப்ஸி கோப்பையை கைப்பற்றியது.மேட்ச் பிக்சிங் ஊழலால் பாதிக்கப்பட்டு இருந்த இந்திய கிரிக்கெட்டிற்கு இதன் மூலம் புத்துணர்ச்சி அளித்து உள்ளனர் இந்திய வீரர்கள்.
சென்னை போட்டியில் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜன் சிங் இத்தொடரில் மொத்தம் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை நிகழ்த்தி உள்ளார்.
இறுதி போட்டியில் இரட்டை சதம் அடித்த ஆஸி.அணியின் மாத்யூ ஹேடனும், 15விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்பஜனும் ஆட்ட நாயகர்களாக தேர்ந்துஎடுக்கப்பட்டனர். இப்போட்டித்தொடரின் சிறந்த வீரருக்கான விருது ஹர்பஜன் சிங்கிற்கு அளிக்கப்பட்டது.