உளவு பார்த்த 50 ரஷியர்கள் வெளியேற அமெரிக்கா உத்தரவு
வாஷிங்டன்:
ரஷியாவிற்கு உளவு பார்த்ததாக கூறி 50 ரஷிய தூதரக அதிகாரிகளை அமெரிக்கா வெளியேற உத்தரவிட்டு உள்ளது.
கடந்த 1986ம் ஆண்டில் ரஷியாவிற்கு உளவு பார்த்ததாக கூறி 80 ரஷிய தூதரக அதிகாரிகளை அமெரிக்காவை விட்டு வெளியேற அப்போதைய அதிபர்ரொனால்ட் ரீகன் உத்தரவிட்டு இருந்தார்.
அதன் பிறகு தற்போது தான் அமெரிக்கா அதிக எண்ணிக்கையில் ரஷிய அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டு உள்ளது.
அமெரிக்க உளவு அதிகாரி ராபர்ட் ஹான்ஸன் கடந்த 15 ஆண்டுகளாக ரஷியாவிற்காக உளவு பார்த்ததை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான்அமெரிக்கா கண்டறிந்து அவரை பதவி நீக்கம் செய்தது.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் விளைவாக இந்த வெளியேற்றம் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதன்கிழமை அன்று 6 ரஷிய அதிகாரிகளை விரும்பதகாதவர்கள் என அமெரிக்கா அறிவித்துள்ளதாக பெயர் கூற விரும்பாத அமெரிக்க அதிகாரிஒருவர் தெரிவித்தார்.
இத்தகவலை வெளியிட்ட சிபிஎஸ் செய்தி நிறுவனம் மேலும் 40 பேர் வரை அமெரிக்காவில் உளவு பார்த்ததற்காக வெளியேற்றப்பட உள்ளனர். ரஷியஉளவாளிகள் அமெரிக்காவில் அதிக அளவில் இருப்பதாக அமெரிக்கா சந்தேகிக்கிறது என தெரிவித்து உள்ளது.