சோனியா காந்தியின் பி.ஏ.மீது சிபிஐ வழக்கு
டெல்லி:
காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தியின் உதவியாளர் மீது வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்து உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தனி உதவியாளராக பணியாற்றியவர் வின்சென்ட் ஜார்ஜ். ராஜீவின் மறைவிற்குப்பின் சோனியாவின் உதவியாளராகதொடர்ந்து பணியாற்றி வருகிறார்.
சோனியா அரசியலுக்கு வருவதற்கு முன்பு, அவரை சந்திக்க விரும்புவர்கள் ஜார்ஜ் மனது வைத்தால் மட்டுமே காண முடியும் என்ற நிலை இருந்தது.சோனியாவை முழுவதும் வழிநடத்தும் ஒரு சக்தி போல் ஜார்ஜ் செயல்பட்டு வந்தார்.
சோனியா அரசியலிற்கு வந்த பின்னும் ஜார்ஜின் அதிகாரம் நீடித்து வந்தது. பல்வேறு தலைவர்களும் சோனியாவிடம் முறையிட்ட பின்னர் தான் தற்போதுஜார்ஜின் அதிகாரம் குறைந்து உள்ளது.
இத்தகைய பின்னணி கொண்ட ஜார்ஜ், முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் தனி செயலாளராக இருந்த போது அளவுக்கு மீறி சொத்து சேர்த்ததாக கூறி சிபிஐவழக்கு தொடர்ந்து உள்ளது.
சிபிஐ தொடர்ந்துள்ள வழக்கில், 3 கோடி ரூபாய் அளவிற்கு ஜார்ஜ் சொத்து சேர்த்து வைத்துள்ளதாக குற்றம் சாட்டி உள்ளது. ஒன்றரை கோடி ரூபாய் வரைபல்வேறு வங்கிகளில் டெபாஸிட்டாக உள்ளது.
ஜார்ஜிற்கு சொந்தமான குடியிருப்புகள் மற்றும் கடைகள் டெல்லியின் முக்கிய பகுதிகளான கன்னாட் பிளேஸ், டிபென்ஸ் காலனி போன்றவற்றில் உள்ளன.
டெல்லி மற்றும் பெங்களூரில் விவசாய நிலங்கள் பல ஜார்ஜிற்கு சொந்தமாக உள்ளன. இவற்றின் மதிப்பு ஒன்றரை கோடி ரூபாய் என சிபிஐ தெரிவித்துஉள்ளது.
ஆயுத பேர ஊழலுக்கு பொறுப்பு ஏற்று பிரதமர் வாஜ்பாய் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கோரி வருகிறது. இந்நிலையில் அக்கட்சித் தலைவரின்செயலாளர் மீது இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிபிஐ தரப்பில் இது குறித்து கூறும் போது, ஜார்ஜ் மீதான விசாரணை முன்னதாகவே தொடங்கப்பட்டு விட்டது. விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின்அடிப்படையில் தற்போது வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது என்றனர்.
ஐ.ஏ.என்.எஸ்.