கடலில் விழுகிறது மிர் விண்கலம்
மாஸ்கோ:
வெள்ளிக்கிழமை கடலில் விழுந்து தனது கதையை முடிக்கப் போகிறது மிர் விண்கலம். 15 ஆண்டுகள் இந்த விண்கலத்திற்காக செலவழித்தது போதும்.இனிமேலும் செலவழிக்க கஜானாவில் பணமில்லை என்ற நிலையில் அதனை அழித்து விட முடிவு செய்தது ரஷியா.
பூமிக்கு திருப்பி அழைக்கும் வழியில் அதனை அழித்து விட திட்டமிடப்பட்டது. அதன் படி மிர் விண்கலம் தற்போது பூமியை நோக்கி வந்து கொண்டு இருக்கிறது.
வரும் வழியிலேயே அதனுடன் இணைக்கப்பட்டு உள்ள ராக்கெட் மூலம் விண்கலம் தகர்க்கப்படும். உடைந்த பாகங்கள் பூமிக்கு மேல் உள்ள காற்றுமண்டலத்தை கடந்து வரும் போது ஏற்படும் உராய்வில் எரிந்து விடும்.
மீதி உள்ள எரியாத பாகங்கள் ஆஸ்திரேலியா மற்றும் பிஜி தீவுகள் உள்ள கடல் பகுதியில் விழும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால்அப்பகுதிகளில் எச்சரிக்கையுடன் இருக்க அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தனது 15 ஆண்டு கால விண்வெளி ஆயுளில் ரஷியாவின் பல்வேறு நிலைகளை கண்ட மிர் விண்கலத்தில் 106 விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி செய்து உள்ளனர்.
இந்த விண்கலம் பூமிக்கு திரும்பும் போது அதில் உள்ள காளான்களால் பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. பூமியின் காற்று மண்டலத்துடன் உராயும்போது அதிக பட்ச வெப்ப நிலையில் அவை அழிந்து விடும் என ரஷிய விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அதையும் மீறி பூமிக்கு வந்தால் அவற்றால்பாதிப்புகள் நேரலாம்.
விண்கலத்தின் பாகங்கள் கடலில் விழ ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள போதிலும் பூமியில் அதனால் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு வழங்க 200 மில்லியன்டாலர்களுக்கு இன்சூரன்ஸ் எடுத்து உள்ளது ரஷியா.
மிர் விண்கலத்திற்கு மாற்றாக ஏவப்பட்டு உள்ள சர்வதேச விண்வெளி நிலையம், மிர் விண்கலத்தின் சாதனைகளை முறியடிக்க நீணட நாளாகும்.