ஜீ.டி.வி.யில் ஒளிபரப்பாகிறது ஆயுதப் பேர ஊழல் காட்சிகள்
டெல்லி:
தெஹல்கா டாட் காம் நிறுவனத்தின் வீடியோ ஆதாரங்களை ஜீ.டி.வி. ஒளிபரப்ப உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு அதிக அளவில் விளம்பரங்கள் கிடைத்து உள்ளது என ஜீ டி.வி. நிறுவனம் தெரிவித்து உள்ளது.
ஆயுத பேர ஊழல் தொடர்பான தெஹல்கா டாட் காம் நிறுவனத்தின் வீடியோ ஆதாரங்களை ஜீ டி.வி முழுமையாகஒளிபரப்பு செய்கிறது.
தினமும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பாக உள்ள இந்த வீடியோ ஒளிப்பதிவு வியாழக்கிழமைமுதல் 4 நாட்களுக்கு ஒளிபரப்பாகும்.
இதுவரை தெகல்கா நிறுவனத்தினர் ஒளிப்பதிவு செய்த வீடியோ காட்சிகளில் இருந்து சில காட்சிகள் மட்டுமேசெய்திகளின் போது ஒளிபரப்பப்பட்டன. தற்போது முதன்முறையாக முழுமையாக ஒளிபரப்ப உள்ள இந்தநிகழ்ச்சியை ஸ்பான்ஸர் செய்ய பல்வேறு நிறுவனங்கள் முன்வந்து உள்ளன.
காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது போல் மக்கள் மத்தியில் ஆர்வம் இருக்கும் இந்த பிரைம் டைம்நிகழ்ச்சியில் விளம்பரம் மூலம் அதிக வருமானம் பெற ஜீ டி.வி முடிவு செய்து உள்ளது.
தெஹல்கா நிறுவனத்தின் வீடியோ ஆதாரத்தின் ஒளிபரப்பை காண மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவர். அதனால்,அந்த நிகழ்ச்சியின் போது தங்கள் நிறுவனத்தின் பொருட்களை விளம்பரப்படுத்த பல்வேறு நிறுவனங்கள் போட்டிபோட்டுக் கொண்டு ஸ்பான்ஸர் செய்ய வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் விளம்பரம் செய்ய 10 செகண்டுகளுக்கு 5லட்ச ரூபாய் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
பரபரப்பான முறையில் செய்திகளை ஆதாரங்களுடன் வெளியிட்டு வரும் நிறுவனம் தெகல்கா டாட் காம்நிறுவனம். கிரிக்கெட் மேட்ச் பிக்ஸிங் ஊழலில் இந்திய வீரர் மனோஜ் பிரபாகர் மூலம் ரகசிய முறையில் படம்பிடித்து அது பற்றிய தகவல்களை வெளியிட்டது.
அதுபோல் இந்திய பாதுகாப்புத்துறையில் நிகழும் ஊழல் குறித்த செய்திகளை வீடியோ ஆதாரங்களுடன் கடந்தவாரம் வெளியிட்டது. இதனால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
இவ்வாறு தனது பெயருக்கு ஏற்ப பரபரப்பான செய்திகளை வெளியிட்டு வரும் தெஹல்கா டாட் காம் நிறுவனத்தின்26 சதவீத பங்குகளை வாங்க ஜீ டி.வி நிறுவனம் திட்டமிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.