தேர்தல் செலவு: வேட்பாளர்களை தீவிரமாக கண்காணிக்க ஆணையம் திட்டம்
சென்னை:
நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் அதிக அளவு செலவுசெய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்துக்காக அதிக அளவு பணத்தை செலவழிப்பவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றுதேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் நடக்கும் தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம் மற்றும் யூனியன் பிரதேசமானபாண்டிச்சேரி தேர்தல் அதிகாரிகளிடம், தேர்தல் பிரசாரத்தின் போது அதிக அளவு பணத்தை அரசியல் கட்சித்தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள், கட்சித் தொண்டர்கள் செலவழிக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு தேர்தல்ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கல் செய்ய வரும் போது அவர்கள் மிகப்பெரிய ஊர்வலத்துடன் வரக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுதவிர, தனியார் மற்றும் அரசுக்குச் சொந்தமான கட்டிட சுவர்களில், சுவரொட்டிகள் ஒட்டக் கூடாது.விதிமுறைகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
ஆளுயரக் கட் அவுட்டுக்கள், பிரம்மாண்ட வளைவுகள் ஆகியவை அமைப்பதும் தடுக்கப்பட வேண்டும் என்றும்தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறி நடப்பவர்களைக் கண்காணிக்கும் பணியில் போலீசாரும் ஈடுபடுத்தப்படுவர்என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
தமிழகத் தேர்தல்:
இதற்கிடையே, தமிழக சட்டசபைக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று டெல்லியில் அறிவிக்கப்படும் எனதலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் சென்னையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
சென்னை விமானநிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் சட்டசபைத் தேர்தலை அமைதியானமுறையில் நடத்த அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது என்றார்.
யு.என்.ஐ.