ஜி.எஸ்.எல்.வியில் தீ பிடித்ததா?
ஸ்ரீஹரிகோட்டா:
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை விண்ணுக்கு உயர்த்த உதவும் 4 ஸ்ட்ராப் ஆன் மோட்டர்களில் ஒரு மோட்டாரில் தீப்பிடித்துக் கொண்டதால் தான் ராக்கெட் ஏவும் பணி தோல்வியடைந்ததாகத் தெரிய வந்துள்ளது.
புதன்கிழமை மாலை 3.47 மணிக்கு ராக்கெட் செலுத்தப்பட இருந்தது. கிளம்புவதற்கு ஒரு நொடி இருந்த நிலையில்ஒரு மோட்டரில் தீ பிடித்துள்ளது. இதனால் தான் இந்த மோட்டார் தேவையான அளவு உந்து விசையை உற்பத்திசெய்யவில்லை.
இதையடுத்துத் தான் ராக்கெட்டின் முக்கிய என்ஜினை கிளம்ப விடாமல் கம்ப்யூட்டர் தடுத்துள்ளது. முழுஆய்வுக்குப் பின்னர் தான் ஜி.எஸ்.எல்.வியின் தோல்விக்கான காரணம் தெரிய வரும்.
161 அடி உயரம் கொண்ட இந்த ராக்கெட் தான் இந்தியா இதுவரை தயாரித்த ராக்கெட்களிலேயே மிகப் பெரியது.அதிக திறன் வாய்ந்தது. இந்த ராக்கெட் தயாரிப்புக்காக அரசு 14 பில்லியன் ரூபாய் செலவழித்துள்ளது.
முதலில் அமெரிக்காவின் ஜெனரல் டைனமிக்ஸ் நிறுவனத்திடமிருந்து தான் இந்த ராக்கெட்டுக்குத் தேவையானகிரையோஜெனிக் என்ஜினை வாங்க இந்தியா திட்டமிட்டது. ஆனால், அமெரிக்க அரசு அதைத் தடுத்துவிட்டது.இதையடுத்து ரஷ்யாவிடமிருந்து இந்த என்ஜின்களை இந்தியா வாங்கியது.
இப்போது தானே சொந்தமாக கிரையோஜெனிக் என்ஜின்களைத் தயாரிக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது.